சென்னைக்கு ‛அலர்ட் மெசேஜ்’.. அடுத்த 2 நாட்கள் மழை எச்சரிக்கை! ‛டானா புயல்’ எபெக்ட் எப்படி இருக்கும்?
சென்னை: வங்கக்கடலில் ‛டானா' புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழை எப்படி இருக்கும்? என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் விளக்கி உள்ளார்.
வங்கக்கடலில் டானா புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் 25ம் தேதி காலையில் ஒடிசா மாநிலம் பூரிக்கும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் இடங்களுக்கு மிக கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு புயல் பாதிப்பில் மக்களை காப்பாற்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் கூட சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இந்த புயலுக்கு ‛டானா' என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை 24ம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை இரவு முதல் 25ம் தேதி காலைக்குள் ஒடிசா மாநிலம் பூரிக்கும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும்.
இப்புயல் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், வங்கக்கடலின் வடபகுதியிலும் கடல் கொந்தளிப்பாகவும், சூறாவளி காற்று வீசவும் வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளை எடுத்து கொண்டால் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. 12 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கோவையில் 9 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி இருக்கிறது. வானிலை முன்னறிவிப்புகளை பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழையை பொறுத்தவரை நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,சேலம், உள்ளிட்ட வடஉள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications