கரையை கடக்கும் புயல்.. வீசும் சூறைக்காற்று.. மாமல்லபுரம், மரக்காணத்தில் மின்சாரம் துண்டிப்பு
சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் நிலையில் சூறைக்காற்று வீசி வருகிறது. மழை ஓய்ந்த நிலையில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே பலத்து காற்று வீசுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம், மரக்காணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து வருகிறது. புயலின் முன்பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புதுச்சேரி அருகே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே அடுத்த 3 மணி நேரத்தில் புயல் கரையை கடக்க உள்ளது.

தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தூரத்திலும், மாமல்லபுரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த புயலின் வேகம் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று இரவு 15 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையை நோக்கி வந்தது. இது இன்று காலையில் 13 கிலோமீட்டர் வேகமாகவும், அதன்பிறகு 10 கிலோமீட்டர் வேகமாகவும் குறைந்தது. தற்போது புயல் கரையை நெருங்கும் வேகம் என்பது இன்னும் குறைந்துள்ளது. தற்போது மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் புயல் மெதுவாக நகர்ந்து வருகிறது.
இந்த புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 5.30 மணியளவில் புயல் கரையை கடக்க ஆரம்பித்தது. புயல் கரையை கடக்க ஆரம்பித்ததும் கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கடல்கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம், மரக்காணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரவு 7 மணி வரை கன முதல் மிக கனமழை வாய்ப்பு உள்ளது.
அதேபோல் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஈரோடு, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என கூறப்பட்டுள்ளது. வானிலை மையம் அறிவித்தபடி மேற்கண்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications