சென்னை அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசம்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் அதிகாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இன்று அம்மா உணவகங்களில் உணவு இலவசம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று மதியம் பெஞ்சல் புயல் உருவானது. கடந்த சில நாட்களாக புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் நேற்று அந்த புயல் உருவானது.

இந்த பெஞ்சல் புயல் இன்று மதியம் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் தற்போது புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாளை அதிகாலை அல்லது காலையில் தான் புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை அறிவிக்கப்பட்டுள்ளது
தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றப்புறங்களில் மழை கொட்டிதீர்த்து வருகிறது. இதற்கிடையே தான் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுவைக்கு மாலை 4 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக சென்னையில் வெள்ள அபாய பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இன்னும் பலர் தங்களின் வீடுகளில் தங்கி உள்ளனர். படிப்படியாக பல இடங்களில் மழைநீர் தேங்குவது அதிகரித்து வரும் நிலையில் தான் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் உணவு இலவசம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொடர் மழையின் காரணமாக யாரும் உணவின்றி சிரமப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications