"ஆரஞ்சு அலர்ட்.." அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் மொத்தம் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், அதில் கோவை, நீலகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில் கூட கனமழை கொட்டி தீர்த்ததால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கனமழை தொடர்பாக வானிலை மையம் முக்கிய அலர்ட் ஒன்றைக் கொடுத்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தலைக்கு மேலே 'சிகப்பு தக்காளி’.. கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்..வெளுத்து வாங்கப் போகும் கனமழை! உஷார்
மழை இருக்கு: அதேபோல திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் சாலையில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்புகளும் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஜூலை 30ம் தேதி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; தேனி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மழை தொடரும்: நாளை ஜூலை 31ம் தேதி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications