சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை.. இனி எப்படி இருக்கும்?
சென்னை: பெஞ்ஜல் புயல் மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே (புதுச்சேரி அருகே) இன்று கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையிலும், இப்போது பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுபற்றி வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, மழை இப்போது நம்மை நெருங்கி விட்டது, சென்னையில் பல பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. நேரம் செல்ல செல்ல படிப்படியாக மழை தீவிரம் அடையும் என்கிறார்கள்.
வங்கக்கடலில் கடந்த 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில் அதன் பின்னர் தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நேற்று புயலாகவும் வழுப்பெற்றது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இதன்படியே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், நேற்று முன்தினம் இரவு வெளுத்து வாங்கியது. அதேநேரம் மதியத்திற்கு பிறகு மெதுவாக மழை விட்டு விட்டு பெய்யத் தொடங்கியது.
இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் சரியாக 11 மணிக்கு மேல் மழை தனது ஆட்டத்தை மீண்டும் தொடங்கியது. விடிய விடிய பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மெதுவாகவும், சில இடங்களில் பலமாகவும் பெய்து வருகிறது. புயல் நெருங்கி வரும் நிலையில், நேரம் செல்ல செல்ல சென்னையில் பலத்த மழை பெய்யும் என்றே வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த சூழலில் புயல் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது இயல்பு. அந்த வகையில் சென்னையின் தாழ்வான பகுதிகள் என்பதால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. அதேநேரம் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. திருவெற்றியூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் இந்த முறை தேங்கவில்லை.. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை.. மேட்லி சுரங்கப்பாதை, திநகர் துரைசாமி சுரங்கப்பாதை ஆகியவற்றிலும் தண்ணீர் தேங்கவில்லை..
கனமழை பெய்து வருவதால், வட கடலோர மாவட்ட மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிரவேறு காரணங்களுக்காக வெளியில் செல்ல வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது . புயல் எச்சரிக்கை காரணமாக ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலைகளில் இன்று பொதுப்போக்குவரத்து புயல் வரும் நேரங்களில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீ.,க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். சில இடங்களில் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாபலிபுரம் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications