இது கொடுமை.. வயநாடு உட்பட 5 மாவட்டங்களுக்கு தீவிர மழைக்கான ரெட் அலர்ட்.. மீட்பு பணி நிலைமை?
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வயநாடு சூரல்மலை நிலச்சரிவுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வயநாடு சூரல்மலைப் பகுதிகளில் அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி இருக்கும் நிலையில் பெருவெள்ளத்துக்கு இடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கேரளாவில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த சில நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டியது.

கேரளாவின் வயநாடு மலைப் பகுதிகளில் பல பகுதிகளில் நேற்று காலை முதலே லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வயநாடு சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவுகளுடன் காட்டாற்று வெள்ளமும் பாய்ந்தோடியதால் பொதுமக்களின் குடியிருப்புகளை மிக மோசமாக பாதித்தது. பள்ளிக்கூட முகாம்களில் தங்கியிருந்தவர்களும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். அத்துடன் முண்டகக்கை பகுதியில் போக்குவரத்துக்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனையடுத்து நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிகள் பெரும் சிரமங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து ராணுவ வீரர்களும் விமானப் படை ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கி தவிக்கின்றனர். இன்னமும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு உதவ தயார் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் என சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையத்தின் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையால் நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் அச்சம் எழுந்துள்ளது. இதனால் மீட்பு பணிகள் மற்றும் நிலச்சரிவில் சிக்கியோர் கதி என்ன ஆகுமோ என்ற கவலை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications