கிடுகிடுவென உயரும் கபினி, கேஆர்எஸ் அணைகள்! காவிரியை திறக்குமா கர்நாடகா? தமிழக அணையின் நிலவரம் என்ன?
பெங்களூர்: தமிழகத்திலும் கர்நாடகாவிலும் கனமழை பெய்து வரும் நிலையில் இரு மாநிலங்களிலும் அணைகளின் நீர் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பார்ப்போம்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி, சேலம், தென்காசி, திருச்சி, கொங்கு மாவட்டமான கோவை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

கோடை வெயில் கொளுத்தியதால் தமிழகத்தில் நீர் நிலைகள் எல்லாம் பெரும்பாலும் வறண்டுவிட்டன. இதனால் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் கோடையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் உள்ளிட்டவையால் மழை பெய்தது.
இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை போல் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு மழை வெளுத்து வாங்குகிறது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி மேட்டூரில் தற்போது 42.7 அடி நீர் இருப்பு உள்ளது. அது போல் பவானி சாகரில் 49.5 அடியும் அமராவதியில் 27.1 அடியும் வைகையில் 114.15 அடியும் மணிமுத்தாறில் 67.6 அடியும் பேச்சிபாறையில் 27.7 அடியும் திருமூர்த்தியில் 38.63 அடியும், சாத்தனூரில் 117.15 அடியும் நீர் இருப்பு உள்ளது.
அது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளுக்கான நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் 92.97 அடி நீரும், கபினியில் 50.38 அடி நீரும் ஹரங்கியில் 89.53 அடி நீரும் ஹேமாவதி அணையில் 69.07 அடி நீரும் இருப்பு உள்ளது. கர்நாடகாவை பொருத்தமட்டில் கிருஷ்ணராஜ சாகர் அணையும் கபினியும் முக்கியமான அணைகள் ஆகும்.
கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்துமே அதன் கொள்ளளவில் 50 சதவீதத்திற்கு மேல் நீர் இருப்பு உள்ளது. இதனால் காவிரியிலிருந்து நீரை கர்நாடகா அரசு திறந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது போல் தமிழகத்தில் உள்ள அணைகளை எடுத்துக் கொண்டால் பவானிசாகர், பெரியாறு, வைகை, பாபநாசம், பேச்சிப்பாறை, பெருச்சானி, சாத்தனூர், திருமூர்த்தி ஆகிய அணைகளில் மட்டுமே 50 சதவீதம் மேல் நீர் இருப்பு உள்ளது. சாத்தூர் அணையில் மொத்த கொள்ளளவில் 119 அடியில் 117.15 அடி நீர் இருப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications