Rain: சென்னையில் 2 நாட்களாக இரவு நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. இன்று வானிலை எப்படி இருக்கும்?
சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்றும் சென்னையில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும், சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையில் இரண்டாவது நாளாக இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. மடிப்பாக்கம், ஆலந்தூர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (செப்டம்பர் 1) காலை 10 மணி வரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் மிதமான மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் போது மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெயில் மிதமான அளவிலேயே இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனினும், தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு குஜராத் - கொங்கன் - கோவா கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடல்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய - தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், மேகவெடிப்பு காரணமாக, சென்னை மணலி உள்ளிட்ட மூன்று இடங்களில், 27 செ.மீ., அளவுக்கு அதிகனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 37 இடங்களிலும் கனமழை பெய்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர், 6 வரை, சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஒரு சில இடங்களில், இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஓரளவு ஆறுதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications