பேய் மழை வெளுக்கப் போகுது! குளிருக்கு குட் பை! வங்கக் கடலில் உருவாகும் பூதம்..அடுத்த வாரம் சர்ப்ரைஸ்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில் தமிழகத்தின் கடலோர உள் மாவட்டங்களில் கடுமையான குளிர் நிலவி வந்தது. மழை அளவும் வெகுவாக சரிந்தது. இந்த நிலையில் இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 10ஆம் தேதி வாக்கில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடுமையான குளிர் நிலவி வந்த நிலையில், தற்போது அது மெல்ல மெல்ல குறைந்து, கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பதிவாகியுள்ளது

இதனால் அந்த பகுதிகளில் நிலவும் குளிர் குறைந்து, நல்ல காலநிலை நிலவுகிறது. தமிழகத்தின் மேல் வளிமண்டலத்தில் மற்றும் இலங்கைக்கு அப்பாலுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதே இதற்குக் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வானிலை முன்னறிவிப்பு
இந்த சுழற்சி காரணமாக தான் கடந்த இரண்டு நாட்களாக சில இடங்களில் மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்த மழை நிலை இன்றும் தொடர வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்தர் தனது தகவலில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில்," மலைப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இரவு நேரத்தில் லேசான மழை இருக்கும். இதைத் தொடர்ந்து வரும் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை குறைந்து காணப்படும். அந்த காலகட்டத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
குளிர் அதிகம்
அதே சமயம் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தை விவசாயிகள் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளலாம். வயல்வெளி பணிகள், நாற்று நடவு போன்ற பணிகளுக்கு இது சாதகமான காலநிலை" எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 10ஆம் தேதி முதல் மீண்டும் வானிலை மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
ஜனவரி 10 மழை
இந்த தாழ்வுப் பகுதி உருவானால், அதன் தாக்கம் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதன் காரணமாக 10, 11, 12ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் சூழல் உருவாகும் என ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை போன்ற பகுதிகளிலும் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் உள் மாவட்டங்களிலும் தொடர்ந்து லேசான முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.
வானிலை நிலவரம்
மழை அதிகரிக்கும் இந்த காலத்தில், மீனவர்கள் வானிலை தகவல்களை அவ்வப்போது கவனிக்க வேண்டும் என்றும், பொதுமக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வானிலை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications