ராமேஸ்வரத்தை விடுங்க.. இன்னைக்கு டெல்டா மாவட்டங்களில் சம்பவம் இருக்கு! வெதர் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாளை மறுநாள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருக்கிறது. இந்நிலையில் இன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை தீவிரமடையும். அதேபோல இந்த ஆண்டும் தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 34 செ.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. சூப்பர் மேக வெடிப்பு நிகழ்வால் இவ்வளவு மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னர் ராமஸ்வரத்தில் இவ்வளவு பெரிய மழையை மக்கள் கண்டதில்லை.

மறுபுறம் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை தொடங்கி, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை வரையும், தென் மாவட்டங்களில் கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று காலை 7 மணி வரை மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக நேற்று விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி தூத்துக்குடி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை மாணவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications