கோடை வெயிலுக்கு நடுவே குளுகுளு மழை! தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கொட்ட போகுது! பொதுமக்கள் ஹேப்பி
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் பாடாய் படுத்தி வரும் நிலையில், அதில் இருந்து சற்று விடுபடும் வகையில் கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

ஓரளவுக்கு மழை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக இரணியல் (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 30 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), நாலுமுக்கு (திருநெல்வேலி), குளச்சல் (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 20 மிமீ மழை பெய்து இருக்கிறது.
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை வட தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37° - 39° செல்சியஸ், வட தமிழக கடலோர பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33° - 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19° -29° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 39.4° செல்சியஸ் மற்றும் சேலத்தில் 38.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 35.4° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வானிலை மையம்: சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று ஏப்ரல் 15ஆம் தேதி தென் தமிழகம், வட தமிழக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நல்ல மழை: நாளை ஏப்ரல் 16ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 17ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பம்: அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° - 3° செல்சியஸ் உயரக்கூடும். குறிப்பாக அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த 5 நாட்களுக்குக் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் கூறப்படவில்லை.












Click it and Unblock the Notifications