காற்றுடன் பலத்த மழை.. சென்னையில் அடியோடு பெயர்ந்து விழுந்த பேருந்து நிறுத்தம், கலங்கரை போலீஸ் பூத்
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், தரைக்காற்றும் வீசி வருகிறது. நள்ளிரவில் இருந்தே மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழைக்கு நடுவே சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அடியோடு பெயர்ந்து விழுந்தது. பயணிகள் யாரும் அங்கு இல்லாத்தால் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோன்று சென்னை மெரினாவில் போலீஸ் பூத் ஒன்று புயல் காற்றுக்கு அடியோடு இடிந்து விழுந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று மாலையே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் நேற்று இரவு பெய்ய ஆரம்பித்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடையிடையே சின்ன பிரேக் விட்டாலும் தொடர்ச்சியாக கனமழை பெய்ததால், சென்னையின் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

காற்றின் வேகமும் அதிகரித்து இருப்பதால் சில இடங்களில் மரங்களும் சரிந்து கிடக்கின்றன. மழை நீர் தேங்கிய பகுதிகளில் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி செல்வதை காண முடிகிறது. கனமழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது பலத்த காற்று வீசும் எனவும் மணிக்கு 90 கி.மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று, 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், 20 செ.மீ.,க்கும் அதிகமாக கன மழை பெய்யக்கூடும் என, ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால், சென்னை முழுவதும் அச்சுறுத்தி வரும் விளம்பர பதாகைகள், அதை தாங்கும் சட்டகம், கடைகளின் பெயர் பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதனிடையே, சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை அடியோடு பெயர்ந்து விழுந்தது.

பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சமயத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லை. இதனால், பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோன்று சென்னை மெரினா கடற்கரையில் புயல், மழை காரணமாக போலீஸ் பூத் ஒன்று அப்படியே இடிந்து விழுந்துள்ளது. மெரினா கலங்கரை விளக்கத்தின் பின்புறம் மெரினா சர்வீஸ் சாலையில் லூப் சாலை சந்திப்பில் இந்த போலீஸ் பூத் இருந்தது.
இன்று மாலை வீசிய பலத்த காற்றின் காரணமாக இந்த போலீஸ் பூத் கூண்டோடு இடிந்து விழுந்தது. கடற்கரையில் வீசிய காற்றின் காரணமாக இந்த பூத் இடிந்து விழுந்தது. புயல் கரையை இன்று கடப்பதால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் போலீஸ் பூத் இடிந்து விழும் போது, யாரும் அங்கு இல்லாததால் எந்த வித பாதிப்பு ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications