"முடிஞ்சுது!" ஏப்ரல் வரை சுத்தமாக மழை இருக்காது! தமிழகத்தை வைத்து செய்யும் வெப்பம்! வெதர்மேன் அலர்ட்
சென்னை: கடந்த சில காலமாகவே தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் நிலையில், வரும் காலங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்தது. முதலில் மிக்ஜாம் முயல் காரணமாகச் சென்னை மற்றும் அண்டை வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அந்தச் சமயம் கொட்டிய கனமழையால் ஒட்டுமொத்த நகரமே கூட முடங்கிப் போனது.

அதன் பிறகு சில வார இடைவெளியில் மீண்டும் தென் தமிழகத்தில் மழை பெய்தது. புயல் எதுவும் இல்லை என்ற போதிலும் தென் தமிழகத்தில் அதி தீவிர கனமழை கொட்டியது. இதனால் பாதிப்புகளும் கூட சற்று மோசமாக இருந்தது. குறிப்பாகக் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை மோசமாக இருந்தது.
மழை: ஜனவரி முதல் வாரம் வரை கூட பருவமழை சிறப்பாகப் பெய்தது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின. ஆனால், பருவமழை நின்ற உடனேயே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தான் மாநிலத்தில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகும். ஆனால், இந்த முறை பிப். மாதமே வெப்பம் பல இடங்களில் உச்சம் தொட ஆரம்பித்துவிட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டில் முதல்முறையாக வெப்பம் சதமடித்தது. தொடர்ந்து ஈரோடு, கரூர் பரமத்தி ஆகிய பகுதிகளிலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பொதுவாக கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக மதிய நேரங்களில் வெளியே செல்வதே சிரமமாக இருக்கிறது. மழை வரும் என்ற எதிர்பார்ப்பு உடன் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.
பிரதீப் ஜான்: இதற்கிடையே வரும் காலத்தில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தென்னிந்தியாவில் பிப்ரவரி மாதம் வறண்ட வானிலையுடன் முடிகிறது. மார்ச் மாதமும் பெரியளவில் மழை இருக்காது.
மார்ச் மாத இறுதியில் வறட்சி அதிகரிக்கும்.. அதீத வெப்பம் பதிவாகும். ஏப்ரல் 1-2ஆவது வாரத்தில் தான் ஓரிரு இடங்களில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காடுகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வனத்துறை தீ விபத்துகளைக் கண்காணிக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அதாவது அடுத்த 1.5 மாதத்திற்குத் தமிழ்நாட்டில் மழை இருக்காது என்றே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை: மறுபுறம் சென்னை வானிலை ஆய்வு மையமும் கூட அடுத்த இரண்டு நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் தமிழகத்தில் அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications