கேரளா: பத்தனம்திட்டாவில் மேக வெடிப்பு? 2 மணிநேரத்தில் 21 செ.மீ மழை! சபரிமலையிலும் வெளுத்தெடுக்கிறது!
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இடைவிடாமல் 2 மணிநேரத்தில் 21 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. பத்தனம்திட்டாவில் மேகவெடிப்பால் இத்தகைய பெருமழை பெய்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது. சபரிமலை கோவில் வனப் பகுதிகளிலும் கனமழை வெளுத்தெடுத்து வருவதால் பக்தர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலையில் மண்டல பூஜை, மகர பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை வழிபட்டு திரும்புகின்றனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க அலை அலையாக ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

சபரிமலைக்கு இருமுடி கட்ட வரும் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சபரிமலைக்கு வழக்கத்தைவிட கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருவர் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சபரிமலையில் முழு வீச்சில் செய்யப்பட்டும் உள்ளன.
இந்த நிலையில் சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த சில மணிநேரங்களாக கனமழை இடைவிடாமல் கொட்டி தீர்க்கிறது. இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் 2 மணிநேரத்திலேயே 21 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. மேகவெடிப்பு இல்லாமல் இத்தகைய கனமழைக்கு சாத்தியமில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் பத்தனம்திட்டாவில் பெரும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சபரிமலை கோவில் பகுதியிலும் பெருமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மழையில் யாத்திரையை தொடங்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர். மேலும் சபரிமலை பம்பை நதியில் பெருவெள்ளம் ஏற்படும் அச்சம் உருவாகி இருக்கிறது.
இடுக்கி மாவட்டத்தில் குமுளி- மூணாறு சாலையில் மரங்கள் சாலையில் விழுந்துள்ளன; சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குமுளி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இதனிடையே திருவனந்தபுரம், எர்ணாகுளம், வயநாடு, இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வயநாடு பகுதிகளில் கனமழை கொட்டினால் கர்நாடகாவின் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் தமிழ்நாட்டுக்கான கர்நாடகாவின் காவிரி நீர் திறப்பு அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டு கடலோரப் பகுதி, தென்மேற்கு மத்திய மேற்கு வங்க கடல், குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிதான் கேரளாவிலும் கடுமையான மழைப்பொழிவை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகா
கர்நாடகா மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா தலைநகர் பெங்களூரில் 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தட்சின கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, குடகு, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications