கோவையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மக்கள் வெளியே செல்ல வேண்டாம் - ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
கோவை: ஃபெஞ்சல் புயல் கரையைக் கடப்பதால் கொங்கு மண்டலத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை முதல் டிசம்பர் 3 வரை கனமழை பெய்யவுள்ளதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் சென்னைக்கு தென் கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள FENGAL புயல் சின்னமானது வரும் மணி நேரங்களில் படிப்படியாக மேற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்றிரவு மகாபலிபுரம் முதல் மரக்காணம் இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கும். இந்த புயல் சின்னமானது கரையை கடந்த பின் படிப்படியாக வலுவிழந்து தென்மேற்கு திசையை நோக்கி நகரக்கூடும்.

இந்த புயல் சின்னமானது அரபிக் கடலின் உயர் அழுத்தத்தால் நகர்வதால் தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொங்கு மண்டலம், கேரளா வழியாக அரபிக் கடலுக்குச் சென்றடையும். இந்த புயல் சின்னமானது இன்று இரவு வட தமிழகத்தில் கரையை கடந்து நாளை மதியம் வாக்கில் கொங்கு மண்டலத்தை வந்தடையும்.
இதனால், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை மதியத்துக்கு மேல் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழையை நாம் எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால் கீழ்க்கண்ட வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077 மற்றும் 0422-2306051 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையத்தை 0422-2302323 மற்றும் வாட்ஸ் அப் எண்: 81900-00200 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாலோ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறு அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
விளம்பர போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விழாத வகையில் விளம்பர போர்டுகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் நீர்நிலைகளில் துணி துவைக்கவோ, குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் செல்பி (Selfie) எடுக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஆற்றங்கரைகள் மற்றும் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் உயர் மின்சாரம் செல்லக்கூடிய மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம். மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.
பழுதடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு அருகில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருப்பின் நிவாரண முகாம்களில் தங்க விரும்பும் பட்சத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
தரைப்பாலங்களில் வெள்ளநீர் செல்லும்போது அதன் வழியாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து அறிவிப்பு பலகைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் அணைக்கட்டு பகுதிகளுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications