இரவு 7 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது.. லிஸ்ட் பாருங்க! ‘அலர்ட்’ செய்த வானிலை மையம்!
சென்னை: கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 7 மணிக்குள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை எவை என அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று இரவு 7 மணிக்குள் தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, தேனி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த சில வாரங்களில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடிக்கடி மழையும் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications