சென்னை, செங்கல்பட்டு உள்பட ஆறு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை வெளுக்கப் போகும் மழை
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தென்காசி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதியில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை துரைப்பாக்கத்திலும், பள்ளிக்கரணையிலும் தலா 5 செமீ மழை பெய்திருந்தது. மடிப்பாக்கம், மணலி, கண்ணகி நகர் , மேடவாக்கம், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாக்கு செமீ மழை பெய்திருந்தது. இதேபோல் மேற்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல்லின் சில பகுதிகளில் தலா 4 செமீ மழை பெய்திருந்தது.

வெப்ப நிலையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-3° செல்சியஸ் உயர்ந்து காணப்பட்டிருந்தது.. தமிழகத்தில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கூறியிருந்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் கூறியிருந்தது.
தமிழக கடலோரப்பகுதிகளான வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இதேபோல் மேலும் தென்காசி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பில் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications