கர்நாடகா: நீடிக்கும் தென்மேற்கு பெருமழை- குடகில் அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டோடும் காவிரி!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த கர்நாடகா மாநிலமும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. குடகு மாவட்டத்தில் இடைவிடாது கொட்டும் பெருமழையால் காவிரி ஆறு அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டோடுகிறது. கிருஷ்ணா நதியில் 2 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடுவதால் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
கர்நாடகாவில் ஜூலை தொடக்கத்தில் இருந்தே தென்மேற்கு பருவமழை கொட்டி வருகிறது. கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை நீடித்து வருகிறது. காவிரி பிறக்கும் குடகு மாவட்டத்தில் மழை தொடருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம், அபாய கட்டத்தைத் தாண்டி கரை புரண்டோடுகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 1.36 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பல சுற்றுலா தலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிக்கமகளூர் பகுதியில் பெய்யும் பெருமழையால் துங்கா, பத்ரா நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சார்மடி மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஹாசன் சிராடி மலைப் பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. சிவமொக்காவில் மழை கொட்டுவதால் துங்கா ஆறு கரைபுரண்டோடுகிறது.

உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்க்கிறது. மகாராஷ்டிரா எல்லையான பெலகாவியிலும் மழை வெளுத்தெடுக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கொய்னா அணையில் இருந்து பெருமளவு நீர் திறந்துவிடப்பட்டதால் 4 ஆறுகளில் வெள்ளம் இரு கரைகளையும் மறைத்தபடி பாய்ந்தோடுகிறது. கிருஷ்ணா நதியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடுவதால் 200க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. பெலகாவியின் கட்டபிரபா ஆற்று வெள்ளத்தால் கோகாக் நகரம் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. பாகல்கோட்டை கிருஷ்ணா ஆற்றில் அலமாட்டி அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. விஜயநகர் மாவட்டத்தில் துங்கபத்ரா அணை நிரம்பி வினாடிக்கு 1.30 லட்சம் கன அடிநீர் திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற விருபாக்ஷா கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பெருமழையால் கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications