வங்கக்கடலை கவனிச்சீங்களா? பிளக்கப்போகும் மேகங்கள்! தமிழகத்துக்கு தேதி குறித்தது வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்த நிலையில், வடமேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேட்டூர் தவிர மாநிலத்தின் மற்ற அணைகள் அனைத்தும் பரவலாக நிரம்பியுள்ளன. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் எனவும், இதன் காரணமாக மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (நவ.11) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் (நவ.12&13) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதே நவ.14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதன் தொடர்ச்சியாக நவ.16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், நவ.14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதே நவ.15ம் தேதியில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications