கடுங்காபி.. சத்து மாவு.. எல்லாமே சூடா கொடுத்தாங்க.. உயிர் உள்ளவரை ஸ்ரீவைகுண்டத்தை மறக்க மாட்டோம்
சென்னை: ஸ்ரீவைகுண்டம்.. மார்கழி மாதத்தில் பெருமாள் பக்தர்களுக்கு மறக்க முடியாத ஆலயம். வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும் இந்த மாதத்தில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற பக்தர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக போய் விட்டது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்தவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்து உயிரோடு கலந்து விட்டனர் கிராம மக்கள்.
திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வந்தவர்கள் சென்னை திரும்புவதற்கு ரயில் ஏறிய போது தெரியாது இதே ரயிலில்தான் மூன்று நாட்கள் தங்கியிருக்கப்போகிறோம் என்று. பெருமழையால் ஓரிடத்தில் ரயில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது. அது அறியாமலேயே திருச்செந்தூரில் இருந்து ரயில் கிளம்பியது.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் சென்ற போதே அந்த ஆபத்து ரயில் லோகோ பைலட்டிற்கு தெரிய வரவே அங்கேயே நிறுத்தி விட்டார். பயணிகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயிலை விட்டு இறங்க முடியாத அளவிற்கு பெருவெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்தது. கை குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்களும் இரவில் உறங்கிப் போனார்கள்.
கண் விழித்து பார்த்த போது ரயில் கொஞ்சம் கூட நகராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. வெள்ள நீர் ரயில் நிலையத்தை மூழ்கடித்து ஓடிக்கொண்டிருந்தது. ரயில் எப்போது கிளம்பும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. திங்கட்கிழமை இரவோடு ரயிலில் இருந்த வெளிச்சமும் நின்று போனது.
எந்த தகவலுக்கு யாருக்கும் சொல்ல முடியாத நிலையில் பக்கத்தில் இருந்த கிராம மக்கள்தான் அந்த பெருவெள்ளத்திலும் உணவு சமைத்து கொடுத்து மூன்று நாட்கள் பத்திரமாக பாதுகாத்தனர். குழந்தைகளுக்கு பால், சத்துமாவு கொடுத்ததோடு வயதானவர்களுக்கு மாத்திரைகளும் கொடுத்துள்ளனர்.
திங்கட்கிழமை மீட்பு படையினரால் ஸ்ரீவைகுண்டத்தை அடைய முடியாமல் போனது. ஹெலிகாப்டர் மூலம் உணவு குடிநீர் போன்றவை வழங்கப்பட்டது. செவ்வாய்கிழமையன்று மீட்பு படையினர் வந்த பின்னர்தான் பயணிகள் முகத்தில் சிரிப்பு தென்பட்டது.
3 நாட்களாக சிக்கி தவித்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று மீட்டனர். ரயிலுக்கு அருகிலேயே செல்ல முடியாத அளவுக்கு மழை வெள்ளம் ஓடிய நிலையில் உள்ளூர் மக்கள் உணவு, பால் வழங்க, மீட்பு படையினர் மிக கவனமாக திட்டமிட்டு, அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போதும் உடமைகளை சுமந்து கொண்டு பச்சிளம் குழந்தைகளை தூக்கிக்கொண்டும் வெள்ள நீரை கடக்க உதவினர்.
அனைவரும் மீட்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து வாஞ்சி மணியாச்சி அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் இன்று மதியம் 1 மணி அளவில் சென்னை வந்தடைந்தனர்.
தாம்பரத்தில் காலடி எடுத்து வைத்த பிறகு பயணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உறவினர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அப்போது பேசிய ஒரு பெண் பயணி, கிராம மக்கள் எங்கள் உயிரை காப்பாற்றினார்கள் என்று தெரிவித்தார். சுட சுட கடுங்காபி, குழந்தைகளுக்கு சத்துமாவு கொண்டு வந்து கொடுத்தனர். அவர்கள் வீட்டில் இருந்ததை எல்லாம் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருந்தனர் என்று கூறினார்.
உயிர் உள்ளவரைக்கும் எங்களால் ஸ்ரீவைகுண்டத்தையும் எங்களுக்கு உதவிய கிராம மக்களையும் மறக்க முடியாது என்றும் கூறி உள்ள சென்னை திரும்பிய பயணிகள். பெருவெள்ளத்தை பார்த்த சென்னைவாசிகளுக்கு திருச்செந்தூர் பயணம் மறக்கமுடியாத அனுபவமாக போய் விட்டது.












Click it and Unblock the Notifications