காலையில் 101 டிகிரி வெயில்.. இரவு டாமல் டுமீல்! சென்னையை குளிரவிக்கப்போகும் மழை.. வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னையை மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், இன்றிரவு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி மே மாதத்தில் வெயில் முடிந்துவிடும். ஆனால் 2023ல் செப்டம்பர் மாதம் வரை வெயில் வாட்டி எடுத்தது. இதற்கு 'எல் நினோதான்' காரணம் என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். வெயிலின் தாக்கம் மக்களை மட்டுமல்லாது வன விலங்குகளையும் கடுமையாக பாதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்பட்டது.

அதற்கேற்றார்போல இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டது. வழக்கமாக வேலூர் தொடங்கி ஈரோடு வரை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை கோவை, நீலகிரி என வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. ஊட்டியில் இதுவரை பதிவாகத அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. எனவே நீர் நிலைகள் முற்றிலும் காய்ந்து போயின. எதிர்பார்த்த அளவுக்கு குளுமை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்தன. அதேபோல உள்ளூர் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, நீலகிரியில் இந்த நிலைமை எனில், மற்ற மாவட்டங்களில் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. ஆனால் இந்த வெயில்தான் வெப்பச்சலனத்தை ஏற்படுத்தி நல்ல மழையை கொண்டு வந்தது.
எங்கெல்லாம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்ததோ அங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கியது. மே மாதத்தின் இறுதியில் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்திருந்தது. ஆனால் சென்னையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. ஜூன் தொடக்கத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பொளந்து எடுத்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் தணிந்து, பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் மழை வெளுத்து எடுத்திருக்கிறது. தென்சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆர், சிறுசேரி, சோழிங்கநல்லூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் மழை அதிக அளவில் பெய்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று இரவும் சென்னையில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில்,
“பாண்டிச்சேரியை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டுக்கான நேரம் இது. சிவப்பு தக்காளியை போல சென்னைக்கு நெருக்கமாக மழை மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. இது வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இது தீவிரம் குறையாமல் நகருமேயானால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் டமால், டுமீல் என இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இன்று சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்த நிலையில், மழை வந்தால் மக்கள் சற்று நிம்மதியடைவார்கள்.












Click it and Unblock the Notifications