சீசனே ஸ்டார்ட் ஆகலை! அதுக்குள் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை! 13 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
டெல்லி: தமிழகத்திற்கு அக்டோபர் 13 ஆம் தேதி வரை கனமழைக்கான வாய்ப்பிருப்பதால் இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சேலம்ஸ கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் , கரூர் , திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் வரும் 13 ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.

இந்த மழை சில இடங்களில் தீவிரமடைந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகம் மட்டுமல்லாமல் லட்சத்தீவுகள், கேரளா, மாஹே, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். அது போல் வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்.
தமிழகத்திற்கு வரும் 13 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் மும்பையிலும் மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் அங்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவி மும்பை, தானே, பன்வெல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும்.
கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீனவர்களும் வரும் 11 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். அங்கு மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வரை காற்று வீசக் கூடும். வானிலை மோசமடைய வாய்ப்புள்ளதால் இந்த காலகட்டத்தில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications