கர்நாடகாவில் இன்று பந்த்... பாதுகாப்பு வளையத்தில் பெங்களூரு - 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது. தலைநகர் பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் விவசாயிகள் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மகாதாயி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டம்
கன்னட அமைப்புகள் இந்த பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் பேரணி
முழு அடைப்பு போராட்டத்தின் அடையாளமாக கர்நாடகா சட்டசபையை நோக்கி கன்னட அமைப்புகள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் பங்கேற்கின்றன.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு
பேரணியின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை பெங்களூரு நகர காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உச்சக்கட்ட பாதுகாப்பு
200க்கும் மேற்பட்ட வாகனங்களில் காலை முதலே போலீசார் சுற்றி வருகின்றனர். ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், அலுவலகங்கள்
பள்ளி கல்லூரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் நிலைமை மோசமானால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் கூறினர். மேலும் அலுவலகங்களும் இன்று திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி வருகை
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி, துணை குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரும் இன்று பெங்களூருக்கு வர உள்ளதால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.