ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடிப்பார்.. சொல்வது கருணாநிதி 'தம்பி'
பெங்களூர்: தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் என்றும், பாஜக ஓரிடத்தில் வேண்டுமானால் வெற்றி பெறும் என்றும் கருணாநிதியின் 'தம்பி' என்று வர்ணிக்கப்படும் ஒருவரே பேட்டியளித்துள்ளார்.
2009ம் ஆண்டு பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கர்நாடக, தமிழக அப்போதைய முதல்வர்களான எடியூரப்பாவும், கருணாநிதியும் பங்கேற்றனர்.
அப்போது கருணாநிதியை, எடியூரப்பா அண்ணா என்று அழைக்க, பதிலுக்கு கருணாநிதி, எடியூரப்பாவை வாய் நிறைய தம்பி என்று அழைத்தார். இதன்பிறகு கர்நாடகா மற்றும் தமிழக மக்களிடையே நல்லிணக்கம் கூடுதலாக உருவானது.
அண்ணன்-தம்பி
இந்நிலையில், எடியூரப்பா மீது நில முறைகேடு புகார்கள் வந்தன. கருணாநிதி மீது ஈழப்போர் விவகாரம், 2ஜி விவகாரம் பூதாகரமாக கிளம்பி நின்றது. இதனால், அண்ணன், தம்பிகள் இடையே உறவாட நேரமின்றி போனது.
மீண்டு வந்தார்
எடியூரப்பாவை கர்நாடக பாஜக தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சமீபத்தில் அறிவித்தார். இதனால் கர்நாடக அரசியலில் எடியூரப்பாவும், பாஜகவும் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
செல்வாக்குள்ள ஜெயலலிதா
இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு எடியூரப்பா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலில் மோடி அலை வீசியபோதும், தமிழகத்தில் பாஜகவால் பெரிதாக வெற்றியை சுவைக்க முடியவில்லை. ஜெயலலிதாவின் செல்வாக்குதான் இதற்கு காரணம்.
ஜெயலலிதா ஆட்சி
தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவை வளர்க்க பாடுபட்டுவருகிறோம். இவ்விரு மாநிலங்களிலும் வரும் சட்டசபை தேர்தலில் கணிசமான வாக்குகளை பாஜக பெறும். ஜெயலலிதா மீண்டும் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைப்பார்.
பிரசாரம் இல்லை
தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சி. அங்கு கணிசமாக வாக்குகளை பெற முயலுவோம். ஒரு இடத்திலாவது பாஜக வெல்லும் என்ற நம்பிக்கையுள்ளது. கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தமிழகத்தில் நான் தேர்தல் பிரசாரம் செய்வது கடினம். கர்நாடக பாஜக தொண்டர்களை தமிழக பிரசாரத்திற்கு அனுப்பி வைக்க உள்ளேன்.
குடும்ப பிரச்சினை
கருணாநிதியுடன் நல்ல நட்புறவு இருந்தது உண்மைதான். அவர் தற்போது குடும்ப பிரச்சினை உள்ளிட்டவற்றில் சிக்கியுள்ளார். அதேநேரம், ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளார். தமிழர்களிடம் எனக்கு பிடித்ததே, அவர்களிடமுள்ள கடின உழைப்புதான்.
அன்பான தமிழர்கள்
திருவள்ளுவர் சிலை திறப்புக்கு பிறகு, தமிழர்கள் என்னை மிகுந்த பாசத்தோடு நடத்துகிறார்கள். தமிழகத்துக்கு நான் செல்லும்போதெல்லாம் தமிழக மக்கள் என்னிடம் அன்பாக பேசுகிறார்கள். இரு மாநில உறவுமே சிலை திறப்புக்கு பிறகு மேம்பட்டுள்ளது. இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.