ஜமாத் தீவிரவாத குழுக்களின் அபாயகரமான திட்டங்கள்.. சிரியாவாக மாறும் ஆபத்தில் இந்தியா!
டெல்லி: புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கு தீவிரமடைய அடைய, இந்தியாவைச் சுற்றி எந்த அளவுக்கு தீவிரவாதிகள் நாச சதி வலையைப் பின்னியுள்ளார்கள் என்ற திடுக்கிடு்ம் தகவல்களும் குவிந்து கொண்டே வருகின்றன. மேலும் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் தீவிரவாத அமைப்பு ஒரு சாதாரண தீவிரவாத அமைப்பாக இல்லாமல், படு பயங்கரமான சதிகளை அரங்கேற்றும் அபாயகரமான அமைப்பாக விளங்கி வருவதும் தெரிய வந்துள்ளது.
இந்த அமைப்பின் 58 தீவிரவாத பிரிவுகளை மட்டும் தேசிய புலனாய்வு ஏஜென்சி கண்டுபிடிக்கவில்லை. மாறாக வங்கதேச பிரதமரைக் கொல்லும் அதி பயங்கர சதித் திட்டத்தையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜமாத்தின் சதித் திட்டம்
ஏற்கனவே பல்வேறு குழப்பங்கள், சிக்கல்களில் தவித்து வரும் வங்கதேசத்தில் அடுத்து பெரும் தீவிரவாதப் போரைத் தொடுத்து நாட்டை சிதிலமாக்கி தனது லாபத்தை அடைய ஜமாத் அமைப்பு திட்டமிட்டுள்ளது. மேலும் வங்கதேச எல்லையையொட்டியுள்ள மேற்கு வங்க மாவட்டங்களான மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகியவற்றிலும் தாக்குதல் நடத்த இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்த மாவட்டங்களையும் தாக்கி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே இந்த தீவிரவாதிகளின் நோக்கமாகும். ஆனால் மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாமல், அஸ்ஸாம் மற்றும் தொலை தூரத்தில் உள்ள தமிழ்நாட்டிலும் கூட இவர்களின் சதிக் கரங்கள் நீண்டுள்ளதை தேசிய புலனாய்வு ஏஜென்சி கண்டுபிடித்துள்ளது.
மேலும் இன்த அமைப்புக்கு மத்திய கிழக்கிலிருந்து பல்வேறு என்ஜிஓக்கள் பணத்தை அனுப்பி வருவதையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி கண்டுபிடித்துள்ளது. சமூக சேவை என்ற பெயரில் இந்த நிதி இங்கு வருகிறது
புர்த்வானில் குண்டு வெடித்திருக்காவிட்டால்?
ஒருவேளை புர்த்வானில் தீவிரவாதிகள் கண்டு தயாரித்தபோது அது தற்செயலாக வெடித்திருக்காவிட்டால், இவர்களின் ஒட்டுமொத்த சதி வேலையும், திட்டமும் வெளியே தெரிந்திருக்காமலேயே போயிருக்கும். மிகப் பெரிய நாச வேலைகள் நடந்தேறியிருக்கக் கூடும். இன்னும் சில மாதங்களில் வங்கதேசம் தீவிரவாதிகளிடம் சிக்கி சிதறுண்டு போயிருக்கும். அந்த நாட்டின் அரசியல் நிர்வாகம் சீர்குலைந்து போயிருக்கும். மேற்கு வங்க மாவட்டங்களில் பெரும் ஸ்தம்பிப்பு ஏற்பட்டிருக்கும்.
எனவே இதுபோன்ற சதித் திட்டத்துடன் இன்னும் எத்தனை தீவரவாதிகள் உலா வந்து கொண்டுள்ளனர் என்பதைக் கண்டறிய வேண்டிய நிர்ப்பந்தம், அவசரம் ஏற்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கிட்டத்தட்ட 80 நாடுகளிலிருந்து ஆட்களைத் திரட்டி சிரியாவில் போர் நடத்தி வருகிறது சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றியும் விட்டது. இஸ்லாமியக் குடியரசையும் அது ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இந்தியாவில் கிளை திறக்கப் போவதாக அல் கொய்தா பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகளை வலுப்படுத்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பணம் தருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு வெகு அருகே மிகப் பயங்கரமான ஆபத்து காத்திருப்பது உண்மை.
தேசிய அளவிலான கொள்கை உள்ளதா
இப்படிப்பட்ட அபாயத்தை வேரறுக்க, வெட்டி வீழ்த்தும் வகையில் இந்தியாவிடம் தேசிய அளவிலான கொள்கை உள்ளதா என்பது கேள்விக்குறிதான். இந்த தீவிரவாதிகளின் சதியை முறியடித்து நாட்டைக் காக்கும் முயற்சியில் இந்தியாவின் பல்வேறு உளவு அமைப்புகளும் ஒருங்கிணைந்து அயராது பாடுபட்டுக் கொண்டுதான் உள்ளன. ஆனால் மாநில அளவிலான உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுகிறதா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.
குறிப்பாக மேற்கு வங்க காவல்துறை தீவிரவாதிகள் விஷயத்தில் மிகவும் மெத்தனமாக உள்ளது. இந்த விவகாரத்தையே மறைக்கும் முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகிறது. மேற்கு வங்க சிஐடி போலீஸாரும் திறம்பட செயல்படுவதில்லை. அவர்களின் அலட்சியம் மற்றும் திறமையின்மையால்தான் பல முக்கியத் தீவிரவாதிகள் மேற்கு வங்கத்தை விட்டு தப்பி ஓட வழி ஏற்படுத்தி விட்டது.
தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து ஒழிப்பதை விட அரசியல்வாதிகளை சந்தோஷப்படுத்துவதில்தான் மாநில அளவில் போலீஸார் தீவிரம் காட்டுகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.
சாராத சிட் பண்ட் நிதி மோசடிக்காரர்களுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பும் தற்போது அம்பலமாகியுள்ளது. அந்த நிதி மோசடியில் கிடைத்த பணம் தீவிரவாத அமைப்புகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. இது உளவுத்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியா முழுமையாக தீவிரவாதிகளின் கைகளுக்குப் போய் விடாமல் தடுக்க மத்திய உளவு அமைப்புகள் மேலும் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. மாநில காவல்துறையை நம்பி பயன் இல்லை என்ற நிலை உள்ளது.
சிரியா இப்படித்தான். ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்தது. இன்று தனது நாட்டின் பல பகுதிகளை அது தீவிரவாதிகளிடம் பறி கொடுத்து நிற்கிறது. ஈராக்கின் நிலையும் அதுதான். இப்போது இந்தியாவும் சுதாரிக்காவிட்டால் சிரியாவுக்கு ஏற்பட்ட நிலை இங்கும் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. தேசிய அளவிலான திட்டம் வகுத்து, தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாக இதைக் கருதி இந்தியா சுதாரித்து செயல்பட வேண்டியது அவசியம்.
வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக இதுபோன்றவற்றை இனியும் கருத முடியாது. விரைவில் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படையினர் கிளம்பப் போகிறார்கள். எனவே பாகிஸ்தானில் இரு்ந்து செயல்படும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் ஆப்கானிஸ்தானை நிச்சயம் குறி வைக்கும். அப்போது பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து அலை அலையாக தீவிரவாதம் கிளம்பி வருவதை சந்திக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும்.
இது கிட்டத்தட்ட ஒரு போர் போன்ற நிலையில்தான் இருக்கும். வங்கதேசத்தில் 2005ம் ஆண்டு ஜமாத் அமைப்பினர் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகள் மறக்க முடியாதவை, புறக்கணிக்க முடியாதவை. எனவே நாம் நமது நாட்டில் தீவிரவாத அமைப்புகள் முழுமையாக தவிடு பொடியாக்க வேண்டும். அவர்களுக்கு நிதி வருவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். தீவிரவாதிகளாக நமது இளைஞர்கள் மூளைச் சலவை செய்து சேர்க்கப்படுவதை தடுத்தாக வேண்டும். புர்த்வான் போல மேலும் பல சம்பவங்கள் நடக்கலாம் என்று நாம் காத்திருக்க முடியாது. இந்த சம்பவத்திலிருந்து நமக்குக் கிடைத்துள்ள பாடத்தை வைத்து நாம் முன்பை விட சுதாரிப்பாக வேண்டியது அவசியமாகும்.