சித்தியைப் பார்த்தேன்.. குடும்ப விஷயம் பேசினேன்.. வேற பேசலைங்க.. தினகரன்
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. குடும்ப விசயமே பேசினோம் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவை இன்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தினகரன், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இரட்டை இல்லை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் சிறை சென்று திரும்பிய தினகரன் இதுவரை மூன்று முறை சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
சசிகலாவை சந்தித்த தினகரன்
கடந்த 5 ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த தினகரனுடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கான வெற்றிவேல் உள்ளிட்ட 10 பேரும் உடன் சென்று இருந்தனர்.
60 நாட்கள் கெடு
60 நாட்கள் கெடு விதித்தார் தினகரன், இதனையடுத்து தினகரனுக்கு 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆட்சி கவிழாது, உள்கட்சி பூசல் இல்லை என்று ஒரே குரலில் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் தினகரனை முன்னிருத்த வேண்டும் என்பது எம்எல்ஏக்களின் கோரிக்கை. அதை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டார்.
தம்பித்துரை சந்திப்பு
இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று சந்தித்தார். அவரையடுத்து 5 எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினர்.
மீண்டும் தினகரன்
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் சசிகலாவை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தினகரன் தனது குடும்பத்தினருடன் சென்று சசிகலாவை சந்தித்துப் பேசினார்.
அரசியல் பேசவில்லை
சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் குடும்ப விசயங்களையே பேசியதாகவும் தெரிவித்தார். திகார் சிறையில் இருந்து திரும்பிய பின்னர் 3வது முறையாக சசிகலாவை பார்த்து பேசியுள்ளார் தினகரன்.