பிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்றவர் கைது
பாரிஸ்: பிரான்ஸில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை ஏற்றிய டிரைவர் ஒருவர் அல்லாஹு அக்பர் என்று அரபியில் முழக்கமிட்டுள்ளார்.
பிரான்ஸின் டிஜான் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தனது காரை சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது ஏற்றினார். அவர் அரை மணிநேரத்தில் நகரின் 5 இடங்களில் இவ்வாறு செய்தார். இந்த சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். அதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த நபர் காரை மக்கள் மீது ஏற்றிவிட்டு இறைவன் சிறந்தவர் என பொருள் கொண்ட அரபி வாக்கியமான அல்லாஹு அக்பர் என்பதை முழங்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் மனநல மருத்துவமனையில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய வழக்குகளில் சிக்கியவர் என்று கூறப்படுகிறது. நடந்த சம்பவத்திற்கு பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை டூர்ஸ் நகரில் 3 போலீஸ் அதிகாரிகளை தாக்கிவிட்டு அல்லாஹு அக்பர் என்று கூறியவரை போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். மேற்கு ஐரோப்பாவிலேயே பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிக அளவில் உள்ளனர். பிரான்ஸில் 5 முதல் 6 மில்லியன் வரை முஸ்லீம்கள் வசித்து வருகிறார்கள். அண்மை காலமாக தனி நபர் ஒருவர் பிறரை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.