முஸ்லீம்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் மசூதிக்கு தீ வைப்பு
விக்டோரியா: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் விக்டோரியா நகரில் உள்ள மசூதிக்கு சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் யாரோ தீ வைத்துள்ளனர். மசூதியில் இருந்து புகை வருவதை பார்த்த ஒருவர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
IMAGE: Mosque in Texas, the United States, set on fire early yesterday pic.twitter.com/LA2SspRL2m
— The Int'l Spectator (@spectatorindex) January 29, 2017
தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் நான்கு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மசூதி முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டது.
மசூதியில் தீ பிடித்தால் எச்சரிக்கும் அலாரமை யாரோ அணைத்து வைத்துவிட்டதாகவும், கதவை திறந்து வைத்ததாகவும் இமாம் ஹஸ்மி தெரிவித்துள்ளார். 2000ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதியில் கடந்த 21ம் தேதி தான் கொள்ளை சம்பவம் நடந்தது.
யாரோ மசூதிக்குள் புகுந்து லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை திருடிச் சென்றனர். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லீம்கள் மீதான வெறுப்பு காரணமாக இந்த மசூதி குறிவைக்கப்பட்டது.
7 முஸ்லீம் நாட்டு மக்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்த சில மணிநேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.