பிரபல கல்வியாளர், தொழிலதிபர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் சென்னையில் காலமானார்
சென்னை: பிரபல கல்வியாளரும், தொழிலதிபருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் இன்று மாலை சென்னையில் காலமானார்.
கல்வியாளராக, தொழிலதிபராக, பல்வேறு சேவை நிறுவனங்களை நடத்தி வந்தவருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான், சென்னையில் உள்ள பிரபல கிரசென்ட் பொறியியல் கல்லூரியை நிறுவியவர் ஆவார். தற்போது இது பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் பொறியியல் கல்வியில் புதிய புரட்சியை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1928ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் பிறந்தவரான அப்துர் ரஹ்மான், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பொறியியல் கல்லூரிகள், பிற கல்லூரிகள், பள்ளிகளை நிறுவிய கல்வித்துறையில் பெரும் சேவை புரிந்தவர். அதேபோல மருத்துவமனைகள் பலவற்றையும் இவர் நிறுவியுள்ளார்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் துபாயிலும் தனது தொழில் பங்களிப்பை அளித்தவர் அப்துர் ரஹ்மான். துபாயின் மிகப் பிரபலமான ஈடிஏ குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர். அந்த குழுமத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.
தனது சீதக்காதி டிரஸ்ட் மற்றும் ஜக்காத் நிதி கழகம் மூலமாக பல்வேறு தான தர்மங்களிலும் ஈடுபட்டு வந்தார் பி.எஸ். அப்துர் ரஹ்மான்.
மறைந்த அப்துர் ரஹ்மானின் உடல் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை பிற்பகல் 12.30 மணியிலிருந்து 1 மணிக்குள் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.