திமுகவும் அதிரடி.. அதிமுக எம்.எல்.ஏ.க்களை வளைக்கிறது .. மண்டலவாரியாக 'ஆபரேஷனில்' குதித்தது!
அதிமுக எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் நடவடிக்கைகளை திமுக முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக மண்டலம் வாரியாக ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாம்.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் ஆபரேஷனில் திடீரென திமுக முழுவீச்சில் இறங்கியுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற மன்னார்குடி கோஷ்டி களமிறங்கியது. ஆனால் மத்திய அரசு இதை தொடக்கம் முதலே விரும்பவில்லை.
இதனால் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியது மத்திய அரசு. அத்துடன் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தரவும் திமுக தரப்பையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
மத்திய அரசு அதிர்ச்சி
இதனடிப்படையில்தான் ஓ. பன்னீர்செல்வம் அரசுக்கு முழுமையான ஆதரவு தந்தது திமுக. அதேநேரத்தில் அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றியதால் அதிர்ச்சியடைந்தது மத்திய அரசு.
கறார் திமுக
அப்போதே ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து திமுக புதிய ஆட்சியை அமைக்க மத்திய அரசு முயற்சித்தது. ஆனால் திமுக தரப்போ ஆட்சியை கலைத்துவிட்டு பேசுங்கள் என கறாராக கூறிவிட்டது.
புதிய ஆட்சி அமைக்க மத்திய அரசு
இதனால் மத்திய அரசு கையை பிசைந்து நின்றது. இப்போது சசிகலா முதல்வர் பதவியையும் கைப்பற்ற உள்ளார். இது திமுக மற்றும் மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய ஆட்சி அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை திமுக புதுப்பிக்கத் தொடங்கியுள்ளது.
ஆபரேஷன் தீவிரம்
தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் ஆபரேஷனை திமுக படுதீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக மண்டலம் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது திமுக என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.