நாமக்கல்லில் ஒரு 'தருமபுரி இளவரசன்'... காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் மர்ம மரணம்!
நாமக்கல்: காதல் விவகாரத்தில் சேலம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் மர்மமாக உயிரிழந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை கொலை செய்த கொலையாளிகளைக் கைது செய்யக் கோரியும் திருச்செங்கோட்டில் இன்று போராட்டமும் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த சித்ரா என்பவரின் மகன் கோகுல்ராஜ். இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து முடித்துள்ளார்.
ஓமலூரில் இருந்து திருச்செங்கோட்டுக்கு பைக்கில் நேற்று முன்தினம் சென்ற கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து கோகுல்ராஜை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடினர். ஆனால் எங்கும் கோகுல்ராஜ் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இளைஞர் சடலம் கிடப்பதாக ஈரோடு போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார் அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது அது காணாமல் போன கோகுல்ராஜின் உடல்தான் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோகுல்ராஜின் பெற்றொருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த கோகுல்ராஜின் பெற்றோர், காதல் விவகாரத்தில் மகனை அடித்துக் கொன்று ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டு சென்று விட்டனர் எனக் கூறி பள்ளிபாளையம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் மகன் கோகுல்ராஜ் திருச்செங்கோடு அருகிலுள்ள கல்லூரியில் படிக்கும் போது, அதே கல்லூரியில் படித்த சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இருவரும் தற்போது படிப்பை முடித்துவிட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோகுல்ராஜ் அந்த மாணவியை சந்திப்பதற்காக திருச்செங்கோட்டுக்கு வந்துள்ளார். பின்னர், இருவரும் கோகுல்ராஜ் கொண்டுவந்த மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை 4 பேர் கும்பல் காரில் துரத்தி வருவதாக சுவாதி, கோகுல்ராஜின் தாய் சித்ராவுக்கு போனில் தகவல் கூறினார்.
இந்நிலையில் கோகுல்ராஜின் உடல் பள்ளிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் கிடப்பதாக, தகவல் வந்தது. கோகுல்ராஜ் மற்றும் சுவாதியை காரில் துரத்திய கும்பல் அவனை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில், வீசியிருக்கலாம். அல்லது, மிரட்டி அடித்து உதைத்து தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம்.
எனவே திருச்செங்கோட்டில் துரத்திய கும்பல் யார் என்பது குறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
போராட்டம்
இதனிடையே கோகுல்ராஜ்- சுவாதி காதலை ஏற்காத சுவாதியின் பெற்றோரே ஜாதி கவுரவத்துக்காக இந்த படுகொலை செய்துள்ளனர்; இதனால் கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்செங்கோட்டில் பல்வேறு அமைப்பினரும் கோகுல்ராஜின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி அருகே திவ்யா என்ற பெண்ணை இளவரசன் என்ற தலித் இளைஞர் காதலித்து வந்தார்.. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை போன நிலையில் இளவரசன் மர்மமான முறையில் இதேபோல் ரயில்வே தண்டாவளத்தில் உயிரிழந்து கிடந்தான்.
தமிழகத்தை இந்த சம்பவம் உலுக்கி எடுத்தது. தற்போது நாமக்கல்லில் கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் மர்மமாக உயிரிழந்திருப்பது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதால் பதற்றம் நீடிக்கிறது.