சசிகலா காருக்கு வழிவிடுங்க.. செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ.க்கள் கெஞ்சல்
கூவத்தூரில் சசிகலாவின் காரை மறித்து பத்திரிகையாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சசிகலா காருக்கு வழிவிடுமாறு அதிமுக எம்.எல்.ஏக்கள் கெஞ்சிக் கேட்டனர்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட் அருகே மன்னார்குடி குண்டர்கள் மீது நடவடிக்கை கோரி செய்தியாளர்கள் சசிகலாவின் காரை வழிமறித்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ரிசார்ட்டை விட்டு வெளியே வர முடியாமல் சசிகலா தத்தளிக்க நேரிட்டது. அப்போது சசிகலாவின் காருக்கு வழிவிடுமாறு அதிமுக எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களிடம் கெஞ்சினர்.
கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா சிறை வைத்துள்ளார். கடந்த 5 நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களிடம் தம்மை ஆதரிக்குமாறு சசிகலா கெஞ்சி வருகிறார்.
இந்த நிலையில் அங்கு செய்தி சேகரித்த செய்தியாளர்களின் செல்போன்கள், கேமராக்களை மன்னார்குடி குண்டர்படை கும்பல் பறித்துச் சென்றது. இதனால் கொந்தளித்த பத்திரிகையாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடதிதினர்.
அப்போது ரிசார்ட்டில் ஆலோசனையை முடித்துவிட்டு சசிகலா வெளியேவர முயன்றார். ஆனால் சசிகலாவின் காரையும் வழிமறித்து செய்தியாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சசிகலாவால் ரிசார்ட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருட்களை திரும்ப கொடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என செய்தியாளர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் செய்தியாளர்களுடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் சசிகலா காருக்கு வழிவிடுங்கள் என செய்தியாளர்களிடம் கெஞ்சினர்.
ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் செல்போன், கேமராக்கள் செய்தியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.