மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்.. தமிமுன் அன்சாரி, ஹாரூன் ரசீத் போட்டி !
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஹாரூன் ரசீத்தும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நாகப்பட்டினத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் மனித நேய ஜனநாயக கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அதிமுக கூட்டணியில் மனித நேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் இரண்டு தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் ஹாரூன் ரசீத்தும் நாகப்பட்டினத்தில் தமிமுன் அன்சாரியும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சியும் நாகை தொகுதியில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து வந்ததுதான் மனிதநேய ஜனநாயகக் கட்சி. அதனால் அந்த தொகுதியில் இரண்டு முஸ்லீம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.