தமிழகத்தில் காளை நினைவு சின்னம் அமைக்க வேண்டும்.. அரசுக்கு சீமான் கோரிக்கை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவு கூறும் வகையில், காளை நினைவு சின்னம் அமைக்கவேண்டும் என்று அரசுக்கு சீமான் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு ஜல்லிக்கட்டு நினைவாக காளை நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு சீமான் கோரிக்கைவிடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் நினைவாக தமிழகம் முழுவதும் முக்கிய தலைநகரங்களில் காளை நினைவு சின்னம் அமைக்க வேண்டும்.
சாலையோரங்களில் தலைவர்களின் சிலை அமைக்கப்பட்டதை போல காளை நினைவு சின்னத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. கேரளாவில் தேங்காய், கிழங்கு தான் விளைக்கிறது. தமிழகத்தில் இருந்து தான் அரிசி, பால், முட்டை ஆகியவை செல்கிறது.
இந்த பொருட்களை விளைவிக்க தான் நாம் கேரள அரசிடம் தண்ணீர் கேட்கிறோம். கேரள மாநிலத்தினர் இங்கு வேலை பார்க்கிறார்கள். நாங்கள் அவர்களை சகோதரர்களாக பாவிக்கிறோம். சிவகாசியில் நடந்த பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு மலையாள நடிகர்கள் உதவி செய்தார்கள். கேரள அரசிடம் தண்ணீர் கேட்க தார்மீக உரிமை உள்ளது.
சென்னை கடலில் 2 கப்பல்கள் மோதி ஒரு வாரத்துக்கு மேலாகியும் எண்ணெய் படலம் தீரவில்லை. இன்னமும் நம் ஆட்கள் வாளியில் எண்ணெயை அள்ளுகிறார்கள். அறிவு பூர்வமாக வளர்ந்த பிறகும் இந்த நிலை நீடிக்கிறது. மத்திய அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதற்காக, பிரதமர் மோடி விவசாயத்துக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்த உரிய பாதுகாப்பு, மருத்துவ குழு வசதி ஆகியவை செய்து கொடுத்தது வரவேற்கத்தக்கது. ஆனால் மக்கள் போராடும் முன்பே, அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு தடை விதித்தார். ஆனால் இப்போது காந்தி நினைவு நாளில் அந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.