வாலிபரின் மார்பில் 3 முறை சுட்டார் எஸ்.ஐ... காவல் நிலைய பயங்கரம்.. பரபரப்புத் தகவல்கள்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சுட்டதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக மிக நெருக்கத்தில் வைத்து இடது மார்பு உள்பட உடலில் 3 இடங்களில் சுட்டுத் தள்ளியுள்ளார் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்று தெரிய வந்துள்ளது.
விசாரணைக்காக அழைத்து வந்த இடத்தில் இப்படி சப் இன்ஸ்பெக்டர் நடந்து கொண்ட விதம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்கானிக் சையத் முகம்மது
எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்தவர் மெக்கானிக் சையது முகம்மது (24). திருமணம் ஆகாதவர். இவரது நண்பர் ஷாலி, எஸ்.பி. பட்டினம் காவல் நிலையம் எதிரே உள்ள இரு சக்கர வாகன ஒர்க் ஷாப்பில் தனது பைக்கை பழுது பார்க்க கொடுத்திருந்தார். அந்த ஒர்க்-ஷாப்பின் உரிமையாளர் அருள்தாஸிடம், ஷாலியின் வாகனத்தை தருமாறு நேற்று சையது முகம்மது கேட்டுள்ளார்.
வாய்த் தகராறு
அதற்கு, ஷாலி வந்தால்தான் வாகனத்தை தர முடியும் என்று அருள்தாஸ் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.காவல்நிலையம் அருகே மெக்கானிக் தொழில் செய்வதால் காவல் துறைக்கு நெருக்கமாக அருள் தாஸ் இருந்துள்ளார்.
3 ரவுண்டு சுட்டார்
அப்போது சையது முகம்மதுக்கும் எஸ்.ஐ.க்கும் வாக்குவாதம் ஏற்படவே இதையடுத்து எஸ்.ஐ. தன்னிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து சையது முகமதுவை நோக்கி 3 முறை சுட்டார். இதில் 2 குண்டுகள் மார்பிலும், ஒரு குண்டு கையிலும் பாய்ந்த நிலையில் சையது முகம்மது சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார்.
எஸ்.ஐ.யும் மருத்துவமனையில்
அதன் பின்னர் வழக்கம் போல் போலீஸ் ஆம்புலன்ஸ் மூலம் எஸ்ஐயும், சையது முகம்மதுவும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சையது முகம்மது ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எஸ்.ஐ.க்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொலை முயற்சி வழக்குப் போட்டுள்ளனர்
இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, அருள்தாஸ் புகாரின் பேரில் சையது முகம்மது மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முனைப்பில் எஸ்.ஐ. தற்காப்புக்காக சுட்டதில் சையது முகம்மது இறந்துவிட்டார். இது குறித்து கோட்டாட்சியரின் விசாரணை நடத்தப்படும் என்றார்.
குவிந்த பொதுமக்கள்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சையது முகம்மதுவின் உறவினர்கள் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத் துக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர் பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.
கடைகள் அடைப்பு- பதட்டம்
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.