இன்று இல்லாவிட்டால் நாளை.. பல கோடி மக்கள் ரேஷன் கார்டை ரத்து செய்ய தமிழக அரசு பகீர் திட்டம்?
சென்னை: மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால் தமிழக மக்களில் பல கோடி பேருக்கு வருங்காலத்தில் ரேஷன் கார்டு ரத்தாகும் வாய்ப்புகள் உள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியிலுள்ளனர்.
தமிழக அரசு ஜூலை 5ம் தேதி வெளியிட்ட அரசிதழில் பொது வினியோகத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
அதிலுள்ள சில முக்கிய அம்சங்ககளை பாருங்கள்:
ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் ரேஷன் பொருள்கள் கிடையாது
ஏசி இருந்தாலோ, கார் வைத்திருந்தாலோ ரேஷன் அட்டை இல்லை
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தாலும் ரேஷன் கார்டு கிடையாது
3 அறைகள் கொண்ட வீடு, வீட்டில் ப்ரிட்ஜ் இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடையாது
சிறப்பான திட்டம்
இப்படியாக நீண்டு கொண்டே செல்கிறது அந்த பகீர் அறிவிப்பு. பொது வினியோக திட்டத்தில் நாட்டுக்கே முன்னோடி தமிழகம்தான். மற்ற மாநிலங்கள் எல்லாம் இதில் மிகவும் பின்தங்கியவை. மற்ற மாநிலங்களில் உருப்படியாக பலனாளிகளுக்கு பொருட்கள் போய் சேர்வது கிடையாது. விலையும் தமிழகத்தை போல மலிவு இல்லை. இங்கு பல அத்தியாவசிய பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன. இதையெல்லாம் பிற மாநிலங்கள் ஆச்சரியமாக வாயை பிளந்து பார்த்துக் கொண்டுள்ளன.
மீறப்போகிறாரா அமைச்சர்?
முந்தைய ஆட்சியாளர்கள் இப்படி பாடுபட்டு கட்டியெழுப்பிய நுகர்பொருள் சங்கிலியை அறுத்தெறிய தயாராகிவிட்டனர் தற்போதைய ஆட்சியாளர்கள். அரசிதழில் உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து அறிவிப்பு வெளியானதும், சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதங்கம் வெளிப்பட்டது. இதையடுத்து அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், அரசிதழில் வெளியிட்டாலும் இந்த விதிமுறைகள் தமிழகத்திற்கு பொருந்தாது என கூறினார். அப்படியானால் அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பை அரசே மீறப்போகிறது என்கிறாரா காமராஜ்?
சலுகை பெற்றப்பட்டதா?
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும், ஆனால் பதிலுக்கு, மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு அவர் சலுகைகளை பெற்றுவிட்டதாகவும் கூறுகிறார் காமராஜ். ஆனால் அதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களை அவர் காண்பிக்கவில்லை. எனவே அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டதால் அதை செயல்படுத்தியே ஆக வேண்டும் எனக்கூறி, இன்னும் சில மாதங்களில் மேற்சொன்ன விதிமுறைகளை அமல்படுத்தி பல கோடி மக்களிடம் ரேஷன் கார்டுகளை பிடுங்கி, அதிக விலைக்கு உணவு பொருட்களை வாங்க வைக்க இந்த அரசு திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
அரசிதழ் என்றால் சும்மாவா?
அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு பலம் அதிகம். எனவேதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்படி நிலைமை இருக்கும்போது, அரசிதழில் வெளியிட்டுவிட்டு, அதை செயல்படுத்த மாட்டோம் என காமராஜ் கூறுவது யார் காதில் பூ சுற்ற?
ஆபத்து
இதில் இன்னொரு விஷயம் தெரிந்தால் ஷாக் ஆவீர்கள். உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஜெயலலிதா ஒப்புதல் அளித்ததாக கூறப்பட்ட காலகட்டம் அவர் அப்பல்லோ மருத்துவமனையில், யாருடைய கண்பார்வைக்கும் படாமல் சிகிச்சை பெற்ற காலகட்டம். அதுவரை அவர் எதிர்த்த இந்த திட்டத்தை மருத்துவமனையில் இருந்தபடி ஜெயலலிதா ஏற்றது எப்படி? என்ற கேள்வியும் பொதுமக்களுக்கு எழுகிறது. எப்படி காஸ் சிலிண்டர் மானியத்தை மத்திய அரசு நைசாக ரத்து செய்து அறிவித்துள்ளதோ அதுபோலத்தான், மக்கள் மனதை தயார்படுத்திவிட்டு மத்திய அரசு பாணியிலேயே ரேஷன் பொருட்களை அபேஸ் செய்யப்போகிறது அதிமுக அரசு என்ற குமுறல், அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. அரசிதழில் ஜூலை 5ம் தேதி வெளியான இந்த அறிவிப்பு கடந்த வருடம் நவம்பரில் வெளியானது என காமராஜ் இன்று பதற்றத்தோடு கூறியதில் இருந்து இந்த சந்தேகம் இன்னும் அதிகமாகியுள்ளது.