தமிழகத்தில் 15 புதிய தாலுகாக்கள்: ஜெ. அறிவிப்பு
சென்னை: வேலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 45 கோடி ரூபாய் செலவில் 15 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை விதி-110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று வாசித்த அறிக்கையில்,
"வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தில், 18 நீதிமன்றங்கள் போதிய இடவசதி இன்றி இயங்கி வருவதைக் கருத்தில் கொண்டும், நீதிபதி மற்றும் நீதித்துறை அலுவலர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டும், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்காணும் நீதிமன்றங்கள் போதுமான இடவசதியுடன் சிறப்பாக செயல்பட கட்டடம் ஒன்றும், நீதிபதிகளுக்கான குடியிருப்புகளும் 20 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.
இதே போன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 8 நீதிமன்றங்கள் பழமை வாய்ந்த கட்டடத்திலும், பழுதடைந்த கட்டடத்திலும் செயல்படுவதால், அந்தக் கட்டடங்கள் நீதித் துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, மகளிர் நீதிமன்றம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் உள்ளடக்கிய அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் தற்போதுள்ள நீதிமன்ற வளாகத்திலேயே 19 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
15 புதிய தாலுகாக்கள்
பொதுமக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும், காலதாமதமின்றி வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், புதிய கோட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிருவாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, வருவாய்த் துறையின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில், நடப்பு ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களை சீரமைத்து ஆவடியில் ஒரு புதிய வட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வட்டத்தினைப் பிரித்து வாலாஜபாத்தில் ஒரு புதிய வட்டமும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்தினைப் பிரித்து மரக்காணத்தில் ஒரு புதிய வட்டம், சேந்தமங்கலத்தில் ஒரு புதிய வட்டம் உள்பட மொத்தம் 15 புதிய வட்டங்கள் 45 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். இத்துடன் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் 254 வட்டங்களைச் சேர்த்து மொத்தம் 269 வட்டங்கள் செயல்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.