என் வாழ்நாளில் வைகோ போன்ற நல்ல தலைவரைப் பார்த்ததில்லை! - யஷ்வந்த் சின்ஹா
கலிங்கப்பட்டி: தனக்குப் பதவி வேண்டாம் என்று கூறி, தன் உடனிருந்தவர்களை உயர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர் வைகோ. என் வாழ்நாளில் வைகோ போன்ற சிறந்த தலைவரைப் பார்த்ததில்லை என புகழாரம் சூட்டினார் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.
வைகோவின் தம்பி ரவிச்சந்திரனின் மூன்றாவது மகன் மகேந்திர வையாபுரிக்கும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் இரா கிருஷ்ணசாமியின் பேத்தியும், டாக்டர் ராமதாஸின் உறவுக்காரப் பெண்ணுமான ப்ரீத்திக்கும் இன்று கலிங்கப்பட்டியில் திருமணம் நடந்தது.
யஷ்வந்த் சின்ஹா
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா பேசுகையில், "வாஜ்பாய் அரசில் அமைச்சராகும் வாய்ப்பை வைகோ அவர்கள் தொடர்ந்து மறுத்தார் என்பதை உடனிருந்த நான் நன்கு அறிவேன். மேலும் தன்னோடு இருந்த தனது கட்சியை சேர்ந்தவர்களை ( செஞ்சி இராமச்சந்திரன் , கண்ணப்பன்) அப்பதவியில் அமர வைத்து அழகு பார்த்தவர் வைகோ. இப்படிப்பட்ட தலைவரை நான் கண்டது இல்லை," என்றார்.
ராம் ஜெத்மலானி
பிரபல வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி பேசுகையில், "வைகோ அவர்களின் புகழைப் போல் மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் . உலகத் தமிழர்களை அக்கறையோடு கவனித்து கொள்ளும் ஒரே தலைவர் வைகோ மட்டும் தான்," என்றார்.
"தன்னலம் இன்றியும் பிற உயிர்களுக்கெல்லாம் சுயநலம் இல்லாமல் உழைக்கும் மாமனிதர் வைகோ," என தமிழருவி மணியன் பேசினார்.
நடிகர் சிவகுமார்
"தமிழக வாழ்வாதரத்தை காக்க எந்தப் பிரச்சனையானாலும் முதல் போராளியாக களத்தில் இறங்கி போராடுபவர் வைகோ. போர் குணத்தை புருஷ லட்சணமாகக் கொண்டவர் வைகோ", என்றார் நடிகர் சிவக்குமார்
முன்னாள் டிஐஜி
"வேலூர் சிறைக்குள் இருந்து தனது கட்சியை திறம்பட நடத்தியவர் வைகோ . என்னோடு சிறையில் இருக்கும் தோழர்களுக்கு என்ன உணவு மற்றும் வசதியோ அதைத்தான் நானும் ஏற்பேன் என்று வைராக்கியமாக 19 மாதம் கடைசி வரை இருந்தவர் வைகோ. சிறைக்குள் கொசு கடித்து கொண்டு இருக்கும் .அதனை பொருட்படுத்தாமல் எழுதிக் கொண்டே இருப்பார். எங்கேயோ இருக்க வேண்டியவர் இப்படி சிரமப்படுகிறாரே என கண்ணீர் விட்டது உண்டு," என வேலூர் சிறை முன்னாள் டிஐஜி இராமச்சந்திரன் பேசியபோது பலரும் உணர்ச்சிவயப்பட்டனர்.