ஏர் இந்தியா சிஇஓ திடீர் ராஜினாமா.. என்ன காரணம்? டாடா சன்ஸ் சந்திரசேகரனுக்கு அடுத்தடுத்து பிரச்சனை
மும்பை: இந்தியாவின் 2வது பெரிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதும் சரி, டாடா குழுமத்திற்கு கைக்கு மாறிய பின்பும் சரி தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், தற்போது கடுமையான நிதி மற்றும் செயல்பாட்டு சவால்களை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக ஏர் இந்தியாவை லாபகரமான நிறுவனமாக திருப்ப முடியாத இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசிடம் இருந்து பெரும் போட்டிக்கு பின்பு ஏர் இந்தியாவை வாங்கிய டாடா குழுமம், இந்நிறுவனத்தை நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் பலக்கட்ட ஆய்வுகள், நேர்காணலுக்கு பின்பு 2022 ஆம் ஆண்டு ஐந்து ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஏர் இந்தியாவின் சிஇஓவாக பொறுப்பேற்றார் காம்பெல் வில்சன்.
இவருடைய பதவி காலம் 2027 ஜூலை மாதம் முடிவடையும் நிலையில், தற்போது முன்கூட்டியே பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். கேம்ப்பெல் வில்சன் பதவி காலம் முடியும் முன்பே பதவி விலகியிருப்பது, நிறுவனத்தின் உள் நிர்வாகம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதிநிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது தான் கேம்ப்பெல் வில்சனின் பதவி விலகலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 2026ஆம் நிதியாண்டில் மட்டும் ஏர் இந்தியா சுமார் ரூ.20,000 கோடி வரை நஷ்டம் சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு கணிக்கப்பட்ட ரூ.2,000 கோடி நஷ்டத்தை விட பத்து மடங்கு அதிகமான அளவாகும்.
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களிலேயே ரூ.15,000 கோடி நஷ்டம் பதிவாகியுள்ளது. இது 2025ஆம் நிதியாண்டில் பதிவான ரூ.11,000 கோடி நஷ்டத்துடன் ஒப்பிடுகையில், நஷ்டத்தின் அளவு வேகமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது.
ஏர் இந்தியாவில் நஷ்டத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்க முக்கியமான காரணமாக இருப்பது கடந்த ஆண்டு குஜராத்தில் நடந்த போயிங் விமான விபத்து. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தது, நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கு பெரிய பாதிப்பாக அமைந்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் உயர்ந்திருப்பதும், விமான எரிபொருள் விலை உயர்ந்திருப்பதும் விமான சேவை நிறுவனங்களுக்கு நேரடி செலவு சுமையை அதிகரித்துள்ளது.

அதேசமயம், பாகிஸ்தான் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு மூடியது மூலம் இந்திய விமானங்கள் பாகிஸ்தானை சுற்றி செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. இதனால் செலவுகள் அதிகரித்துள்ளது, இதற்கு இணையாக விமான டிக்கெட் விலையை உயர்த்தி வருமானத்தை பெற முடியாதது அடுத்த முக்கிய பிரச்சனை.
இந்த மூன்று காரணிகளும் சேர்ந்து ஏர் இந்தியாவில் சூறாவளி போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
அடுத்தாக அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம், வளைகுடா பக்கம் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது இதனால் ஏர் இந்தியாவின் சர்வதேச விமான சேவைகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியாவின் முக்கிய வருவாய் ஆதாரமே வெளிநாட்டு சேவைகள் தான்.
இந்த நிலைமை தொடர்ந்தால், இனி வரும் காலக்கட்டத்திலும் வருவாய், வர்த்தக பாதிப்பு ஏற்படும் என்பதாலும், நிறுவனத்தை லாப நிலைக்கு மாற்ற முடியாத காரணத்தால் கேம்ப்பெல் வில்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
ஏர் இந்தியா தற்போது 191 போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25% பங்குகளை வைத்துள்ளது. டாடா குழுமத்தின் பல நஷ்டம் தரும் நிறுவனங்களில், ஏர் இந்தியா மிகப்பெரிய நிதிச் சுமையாக மாறியுள்ளது. இது டாடா சன்ஸ் தலைவராக இருக்கும் என் சந்திரசேகரனுக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications