100 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து.. டாடா நிர்வாகம் எடுத்த முக்கிய முடிவு.. என்ன காரணம்?
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உலக அளவில் ஜெட் எரிபொருள் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், ஏர் இந்தியா தனது தினசரி சேவைகளில் சுமார் 100 விமானங்களை குறைக்க முடிவு செய்துள்ளது.
தற்போது தினமும் 1,100 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை விமான பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் ஏர் இந்தியாவுக்கு விமான எரிபொருள் உயர்வு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

எரிபொருள் விலை அதிர்ச்சி காரணம்
ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF) விலை உலக அளவில் ஒரு பேரல் 179 டாலர் வரை உயர்ந்துள்ளது. இந்தியாவில், குறிப்பாக டெல்லியில் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது விலை இரட்டிப்பாகியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது 99.40 டாலராக இருந்தது.
விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் சுமார் 40 சதவீதம் வரை எரிபொருள் செலவு பங்கீடு வகிக்கிக்கும் காரணத்தால் இதில் ஏற்படும் சிறிய விலை உயர்வும் லாபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் விமான நிறுவனங்களை பல வழித்தடத்தில் விமானத்தை நஷ்டத்தில் இயக்க வைத்துள்ளது.
சர்வதேச வழித்தடங்கள் பெரிதும் பாதிப்பு
ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நீண்ட தூர சர்வதேச வழித்தடங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்கள் இயல்பாகவே அதிக செலவு கொண்டவை. தற்போது எரிபொருள் விலை உயர்வால் நஷ்டத்தை அதிகரித்துள்ளன.
மேலும் பாகிஸ்தான் வான்வெளி மூடல் காரணமாக ஐரோப்பா, வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் சுற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது எரிபொருள் செலவை மேலும் அதிகரிக்கிறது. இவை அனைத்திலும் ஏர் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அதிக வெளிநாட்டு சேவை அளிக்கும் நிறுவனங்களில் ஏர் இந்தியா முதன்மையானது.
தொழில் துறை எச்சரிக்கை
இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு (Federation of Indian Airlines) எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை அரசுக்கு தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அடங்கிய இந்த அமைப்பு அரசு உரிய நிவாரண நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது.
ஏர் இந்தியாவின் சவால்
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா ஏற்கெனவே ரூ.20,000 கோடிக்கு மேல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடனான கூட்டு மூலம் நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கும் நிலையில், இந்த எரிபொருள் நெருக்கடி பெரும் சவாலாக மாறியுள்ளது. விமானங்களை குறைப்பது கடினமான முடிவு என்றாலும், மேலும் பெரிய நஷ்டத்தைத் தவிர்க்க இது அவசியம் என்று ஏர் இந்தியா கூறுகிறது.
ஏர் இந்தியாவின் 100 விமானங்களை ரத்து செய்யும் முடிவால் பயணிகள் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். முக்கிய வழித்தடங்களில் விமானங்கள் குறையும், டிக்கெட் விலை உயரும், ஏற்கனவே புக் செய்தவர்களின் டிக்கெட் கேன்சல் ஆகும், பயண அட்டவணையில் மாற்றங்கள் மற்றும் சில சமயங்களில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரும் மாதங்களில் இந்தியாவில் விமானப் பயணங்கள் விலை உயர்ந்ததாகவும், சுமையானதாகவும் மாறலாம்.












Click it and Unblock the Notifications