23 ஆண்டுகளில் நடக்காத அதிசயம்.. சும்மா ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கி போடுங்க.. அதுதான் நல்லது!
சென்னை: தங்கம் விலை இப்போது திடீரென அதிகரித்து வருகிறது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. தங்கம் விலை இதுபோல தொடர்ச்சியாக உயர்வது 23 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. இது தொடர்ந்து தங்கம் விலை மேலும் உயருமா.. இல்லை கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தங்கத்தின் விலை இந்த ஆண்டு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவது, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரியால் ஏற்பட்டும் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் ஆகியவை முக்கியமான காரணங்களாகும்.

தங்கம் விலை
இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராம் ஏற்கனவே ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்ததால், தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. இடையில் ஓரிரு நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும் கூட அவை பெரியளவில் குறையவில்லை. இந்த மாதமும் இதே நிலை தொடர்ந்தால்.. ஆறாவது மாதமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்திருக்கும்.
23 ஆண்டுகளில் முதல்முறை
அமெரிக்காவிலும் கூட ஸ்பாட் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கு முன்பு 2017ம் ஆண்டு தான் இதுபோல நடந்தது. தங்கம் விலை ஜூன் மாதத்தில் ஏற்கனவே 3% உயர்ந்துள்ளது. இந்த மாதமும் தங்கம் விலை உயர்வுடனேயே முடிக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த 23 ஆண்டுகளில் இதுபோல நடப்பது இதுவே முதல்முறை.. கடந்த 2022 மே மாதம் இதுபோல தங்கம் விலை தொடர்ந்து ஆறு மாதங்கள் உயர்ந்தன. அதன் பிறகு மீண்டும் இப்போது நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் இதுபோல தங்கம் விலை தொடர்ந்து 6 மாதங்கள் உயர்வது 13 முறை மட்டுமே நடந்துள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 12 மாதங்களில் தங்கத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
காரணங்கள்
பொருளாதார தாக்கம், புவிசார் அரசியல் குழப்பம் என எல்லாமே தங்கம் விலை உயர்வதற்கான காரணங்களாகவே உள்ளன. இதுபோன்ற குழப்பங்கள் நிலவும்போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டையே தேடுவார்கள். பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் இருப்பதால் அதன் மீதான முதலீடு அதிகரித்து விலையும் மளமளவென உயர்கிறது.
உலக நாடுகள்
இது மட்டுமின்றி மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதாவது தங்கம் விலையை உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றன. பொதுவாகவே உலக நாடுகள் தங்கத்தை வாங்கும் என்றாலும்.. உக்ரைன் போரால் ரஷ்யாவின் அந்நிய செலாவணியை அமெரிக்கா முடக்கிய பிறகு தங்கத்தை வாங்கும் போக்கு உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது. மத்திய வங்கிகள் பெரியளவில் தங்கத்தை வாங்கி குவிப்பதாலேயே தங்கம் விலை பெரியளவில் குறைவது இல்லை.
நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்திருந்தது. இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.9,250க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, 74,000க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications