H1B Visa: ஐடி ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய அறிவிப்பு.. ஹெச்1பி விசா திட்டத்திற்கு 3 வருட தடை?
அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு முக்கிய நுழைவு வாயிலாக இருந்து வந்த H-1B விசா திட்டம் தற்போது புதிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் சில ரிபப்ளிக்கன் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ள புதிய மசோதா, இந்த திட்டத்தை மூன்று ஆண்டுகள் முழுமையாக நிறுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை ஐடி மற்றும் மருத்துவ துறைகளில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான எலி கிரேன் (Eli Crane) அறிமுகப்படுத்தியுள்ளார். "End H-1B Visa Abuse Act of 2026" என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் முறையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அரசு முயற்சி செய்கிறது. இந்த மசோதா மூலம் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு மீண்டும் குடியேற்றக் கொள்கைகளை டார்கெட் செய்யும் பணியை துவங்கியுள்ளது.

3 ஆண்டு தடை: முக்கிய நோக்கம் என்ன?
இந்த மசோதாவின் முக்கிய அம்சம் H-1B விசா திட்டத்தை மூன்று ஆண்டுகள் முழுமையாக நிறுத்துவதாகும். அமெரிக்க வேலை வாய்ப்புகளை குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்தி பெரிய அளவில் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து, ஹெச்1பி விசா திட்டத்தை தவறாக பயன்படுத்தபடுவதாகவும், இதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஹெச்1பி விசாவில் பல மாற்றங்கள் வரும். இதில் முதலாவதாக வருடத்திற்கு வழங்கப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கை 65,000 இலிருந்து 25,000 ஆகக் குறைக்கப்படும். இது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை குறைக்கும். மேலும், H-1B விசா பெறும் நபர்களுக்கான குறைந்தபட்ச வருடாந்திர சம்பளம் 2,00,000 டாலராக நிர்ணயிக்கப்படும். இந்த உயர்ந்த அளவிலான சம்பள கட்டுப்பாடு, அதீத திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனுடன், விசா பெற்றவர்கள் தங்கள் குடும்பத்தினரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல முடியாத வகையிலும் புதிய கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே டிரம்ப் அரசு ஹெச்1பி விசா விண்ணப்பம் செய்வோர் 1 லட்சம் டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற விதியை கொண்டு வந்துள்ளது.
லாட்டரி முறைக்கு பதிலாக சம்பள அடிப்படையிலான தேர்வு
தற்போது H-1B விசா வழங்கும் லாட்டரி முறை நீக்கப்பட்டு, அதிக சம்பளம் வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தொடக்க நிலை மற்றும் நடுத்தர நிலை பணியாளர்களுக்கான வாய்ப்பு குறையும் அபாயம் உள்ளது.
மேலும், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு நபர்களை வேலைக்கு எடுக்கும் முன், தகுதியான அமெரிக்கர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை அரசுக்கு நிரூபிக்க வேண்டும். ஏஐ வந்துள்ளதால் கோடிங் செய்வது இனி அமெரிக்கர்களுக்கு எளிதாகும், இதனால் இந்தியாவில் இருக்கும் திறமையான நபர்கள் அமெரிக்காவுக்கு தேவையிருக்காது.
IT நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
இந்த மசோதா, H-1B விசா பணியாளர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்ய முடியாது என்ற கட்டுப்பாட்டையும் முன்வைக்கிறது. அதேபோல், மூன்றாம் தரப்பு ஸ்டாபிங் நிறுவனங்கள் மூலம் வேலைக்கு எடுக்கும் நடைமுறைகளையும் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறிப்பாக இந்திய IT சேவை நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
H-1B விசா திட்டத்தில் இந்தியர்கள் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளனர். குறிப்பாக சாப்ட்வேர், டேட்டா இன்ஜினியரிங், ஹெல்த்கேர் போன்ற துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களை அதிகமாக நம்பியுள்ளன. இப்புதிய ஹெச்1பி விசா மசோதா திட்டத்தில் ஏற்படும் மாற்றம், இந்திய தொழில்நுட்ப நிபுணர்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கனவை நேரடியாக பாதிக்கும்.
இந்த மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் பரிந்துரையாக மட்டுமே உள்ளது, அது சட்டமாக மாற பல கட்டங்களை கடக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications