திமுக தந்த ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்யுமா காங்கிரஸ்? ஓட்டு போட்ட மக்களுக்கு விஜய் துரோகம்?
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியது திமுகவுக்கு பெரும் relief-ஐ கொடுக்கும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணியில் இருந்த போது வாங்கிய ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு 118 தேவைப்படுகிறது. இதனால் விஜய் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெறுவார் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் 108 தொகுதிகளில் விஜய் இரு தொகுதிகளில் வென்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய நேரிடும். இதனால் தவெகவின் பலம் 107 ஆக குறைகிறது.
தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியிடம் தவெக கேட்டுக் கொண்டது. இதுகுறித்து ராகுல், கார்கேவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விவாதித்தனர்.
இந்த நிலையில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை கொண்டு வர தவெகவுக்கு ஆதரவு தருகிறோம்.
பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது. பெரியாரின் சமூகநீதி, அம்பேத்கரின் அரசியலமைப்பு கொள்கையின்படி தவெக காங்கிரஸ் கூட்டணி அமையும்.
சட்டசபை தேர்தலுக்கு ஆட்சி அமைக்க மட்டும் இந்த ஆதரவு இல்லை, உள்ளாட்சித் தேர்தல்,2029 லோக்சபா தேர்தல், ராஜ்யசபா தேர்தல்களிலும் விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்துள்ளனர்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி 20 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் தற்போது அந்த கூட்டணி முறிந்துள்ளது. இந்தியா கூட்டணியின் முகம் மாறியது.
இந்த சம்பவத்தால் திமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். திமுகவிடம் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை வாங்கிக் கொண்டுவிட்டு, 28 தொகுதிகளை அடம் பிடித்து வாங்கிக் கொண்டது காங்கிரஸ். இப்போது முதுகில் குத்திவிட்டு சென்றுவிட்டது. ரிட்டர்னிங் ஆபிசரின் கையெழுத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை என்றும் விமர்சித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறியிருப்பதாவது: திமுக கூட்டணியில் இருப்பதாக கூறிதான் ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் பெற்றது. பொதுவாக தேர்தலில் வெற்றியை வைத்துதான் ராஜ்யசபா சீட்டை கொடுப்பது வழக்கம். ஆனால் காங்கிரஸ் மீது இருந்த நம்பிக்கை காரணமாக ஸ்டாலின் முன்கூட்டியே வழங்கினார்.
இப்போது முதுகில் குத்திவிட்டார்கள். தவெகவுக்கு செல்வதற்கு முன்னர் திமுக கூட்டணியில் இருந்து பெற்ற ராஜ்யசபா பதவியை காங்கிரஸ் ராஜினாமா செய்திருக்க வேண்டும். தவெக கூட்டணிக்கு சென்றதன் மூலம் காங்கிரஸ் பெரும் பிழையை செய்துவிட்டது.
திமுகவுடன் கூட்டணி அமைக்கும் போதே கூட்டுறவு சங்கத் தேர்தல் வரை தங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என நிர்பந்தித்தார்கள். தற்போதும் தவெகவிடம் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தலிலும் கூட்டணி என கூறியுள்ளனர்.
எனவே காங்கிரஸ் எப்படியெல்லாம் கோரிக்கை வைக்கும் என்பது தவெகவுக்கு இனிதான் தெரியவரும். அமைச்சரவையில் எத்தனை இடம் என்பதை கூட பேசி முடிவு செய்வார்கள்.
எது எப்படியோ திமுகவுக்கு நிம்மதி பெருமூச்சு என்றே சொல்லலாம். விசுவாசத்திற்காக கூட ராகுல் காந்தி, ஸ்டாலினுடன் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை.
திமுகவுக்கு இது பெரும் ரிலீஃப்பாக அமையும். தவெகவுக்கு 118 என்பதை விட 125 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் அவர்களால் comfort -ஆக ஆட்சி அமைக்க முடியும்.
தவெக விஜய்யும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து பெரிய தவறை செய்து விட்டார். அதிமுகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம் என்று சொல்லிதானே மக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் இவர் மீண்டும் அந்த கட்சிகளுடனேயே ஆதரவு கேட்பது ஓட்டு போட்ட மக்களுக்கு செய்த துரோகம் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications