ரூ.2.5 லட்சம் கோடி பிரம்மாஸ்திர திட்டம் ரெடி.. விரைவில் அறிவிக்கப்போகும் மத்திய அரசு!
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்காமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவும் வகையிலும் கடந்த சில வாரங்களாக மத்திய அரசு ஒரு மிகப்பெரிய நடவடிக்கையை மேற்கொள்ள வருகிறது.
சுமார் ரூ.2.5 லட்சம் கோடி அளவிலான கடன் உத்தரவாதத் திட்டத்தை (Credit Guarantee Scheme) கொண்டு வர மத்திய நிதியமைச்சகம் தயாராகி வருகிறது. இந்தத் திட்டம் உலகளாவிய நிச்சயமின்மை காரணமாக பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், நிதி ஆதாரம் அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பணிகளை செயல்படுத்தியுள்ள நிலையில், இந்தத் திட்டம் தற்போது செலவின நிதிக் குழு (Expenditure Finance Committee) ஒப்புதல் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இப்போது அமைச்சரவைக் குறிப்பு தயாராகி வருகிறது, இதற்கு அடுத்தாக பல்வேறு அமைச்சகங்களுடன் ஆலோசனைக்குப் பிறகு மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு செல்ல உள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருக்கும் காரணத்தால் பெரிய அளவிலான தாக்கம் சந்தையிலும், மக்கள் மத்தியிலும் ஏற்படவில்லை. ஆனால் ஒவ்வொரு மாத துவக்கத்திலும் மத்திய அரசு எரிபொருள் விலையை தீர்மானிக்கும் நடவடிக்கை நெருங்கியிருக்கும் வேளையில் சிலிண்டர் முதல் பெட்ரோல், டீசல் வரையில் விலை உயர்வு அமல்படுத்தலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை எதிர்கொண்டு வருவது தான்.
இதற்கிடையில் தான் மத்திய அரசு மத்திய கிழக்கு போரின் காரணமாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும், துறைக்களுக்கும் உதவு ரூ.2.5 லட்சம் கோடி அளவிலான கடன் உத்தரவாதத் திட்டத்தை (Credit Guarantee Scheme) செயல்படுத்த வேகமாக செயல்பட்டு வருகிறது. அரசு பொருளாதார சவால்களை முன்கூட்டியே கண்டறிந்து செயல்படுவது பாராட்டுக்குரியது.
கொரோனா கால அனுபவத்திலிருந்து பாடம்
இந்தப் புதிய திட்டம், கொரோனா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எமர்ஜென்சி கிரெடிட் லைன் கேரண்டி ஸ்கீம் (ECLGS) மாதிரியில் உருவாக்கப்பட உள்ளது. அந்தத் திட்டம் கொரோனா காலத்தில் வர்த்தகத்தையும், உற்பத்தியையும் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க மத்திய அரசு சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு (MSME) கடன் கிடைப்பதை உறுதி செய்து பெரும் உதவியாக இருந்தது.
அதே மாடலிலே் தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவாதம் அளித்து, பாதிக்கப்படும் தொழில்களுக்கு கடன் வழங்க ஊக்குவிக்கப்படும்.
யார் யார் பயன்பெறப் போகிறார்கள்?
இந்தத் திட்டத்தின் முக்கிய பயனாளிகளாக சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் (MSME) இருப்பார்கள். மேலும், எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படும் விமானப் போக்குவரத்து துறை மற்றும் உலகளாவிய சப்ளை செயின் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் தொழில்கள் கண்டறிந்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு உதவ திட்டமிட்டப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் மூலம் பணப்புழக்கப் பற்றாக்குறையை தடுத்து, வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் தொழில் மூடல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.
ஏன் இப்போது இந்தத் திட்டம்?
மத்திய கிழக்கில் (West Asia) தொடரும் பதற்றம் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்து, தொழில்களின் உற்பத்திச் செலவையும் உயர்த்துகிறது, இதனால் வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பு என அனைத்தும் குறையும். இந்த நிலையில், வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டக்கூடும், இப்படி காட்டினால் பல தொழில்கள் மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இத்தகைய சூழ்நிலையில் அரசு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் இந்தத் தயக்கத்தை போக்கி, பொருளாதாரத்தை சீராக இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ரூ.2.5 லட்சம் கோடி அளவிலான இந்த நிதி, வங்கிகளுக்கு நம்பிக்கையை உருவாக்கும். உதாரணமாக பொருளாதார நெருக்கடி காலங்களில் வங்கிகள் தனது நிதியை பாதுகாப்பாகவும், ரிஸ்க் எடுத்து கடன் கொடுப்பதை தவிர்க்கும். இதனால் பாதிப்பில் இருக்கும் தொழில்கள் கடன் கிடைக்காமல் திணறும். மத்திய அரசு இந்த இடைவெளியை நிரப்பி, நிதியை கடன் உத்தரவாதம் மூலம் உட்செலுத்தி தொழில்களை தொடர்ந்து இயங்க வைக்கும்.
அடுத்த கட்டம் என்ன?
அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன், திட்டத்தின் விரிவான வழிகாட்டி நெறிமுறைகள், தகுதி அளவுகோல்கள் மற்றும் செயல்படுத்தும் கால அட்டவணையை மத்திய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், உலகளாவிய நிச்சயமின்மை காலங்களிலும் இந்தியப் பொருளாதாரம் வலுவுடன் நிற்க உதவும்.















Click it and Unblock the Notifications