முகேஷ் அம்பானியின் 1000 ஏக்கர் கனவு திட்டம்.. தட்டிதூக்கிய ஆந்திரா.. ஒரே கையெழுத்து ரூ.1.6 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் புதிய வரலாறு படைக்கும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிகப் பெரிய முதலீட்டை செய்யத் தயாராகி வருகிறது. முகேஷ் அம்பானி, ஜியோ வாயிலாக பல தொழில்நுட்ப நிறுவனங்களை வாங்கியும், முதலீடு செய்தும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அடுத்தக்கட்ட வளர்ச்சியில் பங்கெடுக்க துவங்கியுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.6 லட்சம் கோடி (சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான மிகப்பெரிய டேட்டா சென்டர் கிளஸ்டரை நிறுவ உள்ளது. இந்தத் திட்டம் இந்தியாவின் மிகப் பெரிய டேட்டா சென்டராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிலேயே அதிகளவில் ஏஐ பயன்படுத்தும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பதை கணக்கிட்டு ஏஐ நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு இலவச சேவைகளை வழங்கி வருகிறது, அடுத்தடுத்து அலுவலகங்களை இந்தியாவில் திறந்து வருகிறது. இப்படியிருக்கையில் இந்தியாவில் ஏஐ சேவைக்கான முதுகெலும்பாக இருக்கும் டேட்டா சென்டர்களை அமைக்க இந்தியா தயாராகி வருகிறது.

1.5 ஜிகாவாட் திறன் கொண்ட மெகா திட்டம்
ரிலையன்ஸ் நிறுவனம் 1.5 ஜிகாவாட் (GW) திறன் கொண்ட டேட்டா சென்டர் கிளஸ்டரை உருவாக்க உள்ளது. இந்த டேட்டா சென்டர் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், பெரிய அளவிலான தரவு சேமிப்பு மற்றும் செயலாக்கம் போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பை வழங்கும். இந்தத் திட்டம் கூகுள் நிறுவனம் அதே பகுதியில் திட்டமிட்டுள்ள 1 ஜிகாவாட் திட்டத்தை விட பெரியதாக இருக்கும்.
இந்த மாபெரும் திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்படும் என ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக விசாகப்பட்டினத்தில் போலிபள்ளி (Polipalli) என்ற கிராமத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர் அமைக்கப்படும். இது 2028 அக்டோபர் மாதத்தில் வணிக ரீதியாக இயங்கத் தொடங்கும். இரண்டாவது கட்டத்தில் மேலும் 1 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டு, 2030-ம் ஆண்டுக்குள் மொத்தம் 1.5 ஜிகாவாட் திறன் அடையும்.
1000 ஏக்கர் திட்டம்
இந்த டேட்டா சென்டர் கிளஸ்டர் புதிதாக கட்டப்பட்டு வரும் போகபுரம் விமான நிலையத்துக்கு அருகில் அமைக்கப்படும். இதன் மூலம் ரிலையன்ஸ்-ன் டேட்டா சென்டர் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வசதியை மேம்படுத்தும். இந்த மாபெரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டத்துக்கு 935 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மேலும் கேபிள் லேண்டிங் ஸ்டேஷன் மற்றும் கடல் நீர் உப்புநீக்கும் (Desalination) தொழிற்சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுத்தமான எரிசக்தி
இந்தத் திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறையாகும். டேட்டா சென்டருடன் இணைந்து சோலார் மின்சாரம் மற்றும் பேட்டரி சேமிப்பு அமைப்பை ரிலையன்ஸ் அமைக்க உள்ளது. டேட்டா சென்டர்கள் அதிக மின்சக்தியைப் பயன்படுத்தும் என்பதால், சுத்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவது இந்தத் திட்டத்தை தனித்துவமாக்குகிறது.
ஆந்திரா டிஜிட்டல் ஹப்பாக மாறுகிறது
ஆந்திரப் பிரதேச அரசு இந்தத் திட்டத்துக்கு முழு ஆதரவு அளித்துள்ளது. மாநில முதலீட்டு ஊக்குவிப்புக் குழு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. ரிலையன்ஸ் மற்றும் கூகுள் இரண்டு பெரிய நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்வதால், விசாகப்பட்டினம் இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் மையமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதலீடு வெறும் டேட்டா சென்டர் கட்டுவதோடு மட்டும் நிற்கவில்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுகாதாரம், நிதி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் எதிர்காலத்துக்கு இந்தியா தயாராகி வருகிறது. ரிலையன்ஸின் இந்தத் திட்டம் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். இதோடு விசாகப்பட்டினம் உலக அளவில் முக்கிய டேட்டா சென்டர் நகரமாக உருவெடுக்கும்.












Click it and Unblock the Notifications