டிசிஎஸ் நாசிக் விவகாரம்: ஒரே நேரத்தில் 7 கைதிகள் ஜாமீன் மனு தாக்கல்.. நீதிமன்றத்தில் சம்பவம்
இந்தியாவை மொத்தமாக உலுக்கிய நாசிக் டிசிஎஸ் பிபிஓ அலுவலகத்தின் பாலியல் குற்ற வழக்குகளில், கைது செய்யப்பட்ட ஏழு பேர் ஜாமீன் மனுக்களை நாசிக் நகர் மற்றும் நாசிக் ரோடு நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளனர். அடுத்த சில நாட்களில் இந்த மனுக்களின் விசாரணை நடைபெறும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிதா கானுக்கு இடைக்கால கைது தடை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. நிதா கான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறி மனு தொடுக்கப்பட்ட நிலையிலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது 7 பேர் அடுத்தடுத்து ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

9 வழக்குகள், 8 டிசிஎஸ் ஊழியர்கள் கைது
டிசிஎஸ் நாசிக் விவகாரம் தொடர்பாக இதுவரையில் மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 8 டிசிஎஸ் ஊழியர்கள் மீது பாலியல் குற்றங்கள், மத மாற்ற முயற்சி மற்றும் மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டுகள் உள்ளன. கைதானவர்களில் இரண்டு பேர் பெண்கள். அவர்களில் ஒருவர் டெலிவரி பார்ட்னர் பிரிவின் உதவி பொது மேலாளர் பதவியில் இருப்பவர்.
முதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் ஊழியரின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
முதல் வழக்கு
மார்ச் 26 அன்று தியோலாலி கேம்ப் (Deolali camp) போலீஸ் நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை மற்றும் மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 2 அன்று மும்பை நாகா போலீஸ் நிலையத்தில் மேலும் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முதல் வழக்கு பதிவு செய்யும் முன்பு நாசிக் போலீசார் 30 நாள் டிசிஎஸ் அலுவலகத்தில் ஹவுஸ்கீப்பிங் ஊழியர்களாக பணியாற்றி ரகசியமாக அலுவலக பணிகளை கண்காணித்துள்ளனர். இதன் பின்பே மார்ச் 26ல் முதல் FIR போடப்பட்டது, முதல் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்பு பல பெண் ஊழியர்கள் புகார் அளிக்க முன்வந்தனர்.
ஒன்பது வழக்குகளில் ஆண் டிசிஎஸ் ஊழியர்களே அதிகப்படியான வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 2-3 வழக்குகள் மட்டுமே இரண்டு பெண் டிசிஎஸ் ஊழியர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஜாமீன் மனுக்கள் மற்றும் விசாரணை தேதிகள்
தியோலாலி கேம்ப் வழக்கில் இரண்டு குற்றவாளிகள் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மே 2-ம் தேதி விசாரணை நடைபெறும். தலைமறைவான பெண் ஊழியர் இன்னும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. உதவி பொது மேலாளர் செவ்வாய்க்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மும்பை நாகா போலீஸ் நிலைய வழக்குகளில் ஆண் குற்றவாளிகள் தனித்தனியாக ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களின் விசாரணை ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறும்.
ஒன்பது வழக்குகளில் குறைந்தது ஐந்து வழக்குகளில் குற்றவாளிகள் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணை முடிவுகள் அடுத்த சில நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications