மோடியின் வேலை என்ன? வறுத்தெடுக்கும் பிரபல முதலீட்டாளர்.. அனல் பறக்கும் ட்விட்டர்!
பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு எரிபொருள் சேமிப்பு மற்றும் தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தையும், அன்னிய செலாவணியையும் வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை சாதாரண மக்களுக்கு பல்வேறு கேள்விகளையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் பிரபல முதலீட்டாளரும் நிதி ஆலோசகருமான அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா, மோடியின் இந்த வேண்டுகோளை நேரடியாக விமர்சித்துள்ளார்.

அரசின் பொறுப்பு என்ன?
அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா தனது பதிவில், "மோடியின் இந்த கோரிக்கையும், அறிவிப்பும் முதலில் தேவையே இல்லை" என்று தெளிவாகக் கூறியுள்ளார். ஒரு அரசு மக்களுக்கு சிக்கனத்தை வலியுறுத்துவதற்கு முன்பு தானே சில முக்கிய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
முதலில், எரிசக்திக்கு போதுமான இருப்பை உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, அந்நிய செலாவணி இருப்புகளை போதுமான அளவு பராமரிக்க வேண்டும். மூன்றாவதாக, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். நான்காவதாக, சுற்றுலா மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளை மேம்படுத்தி நாணயத்தை நிலையாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோடியின் வேண்டுகோள்-க்கு ஆதரவாக செய்யப்பட்ட பதிவுக்கு பதில் அளிக்கும் போதும் அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா இந்த விளக்கத்தை கொடுத்தார்.
ஏன் இந்த விமர்சனம்?
பிரதமரின் வேண்டுகோள் மக்களை எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், தங்கம் வாங்குவதை தவிர்க்கவும் கோருகிறது. இது அந்நிய செலாவணியை சேமிக்க உதவும் என்று அரசு தரப்பு நம்புகிறது. ஆனால் அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா போன்ற நிபுணர்கள், அரசு முதலில் தனது அடிப்படைப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.
எரிசக்தி இருப்புகள் போதுமான அளவு இல்லாத நிலையில் மக்களை மட்டும் சிக்கனத்துக்கு அழைப்பது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவை வலுவாக இருந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் உறுதியாக நிற்கும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் என்ன கட்டுப்பாடு
பாகிஸ்தான் முதல் உலக நாடுகள் அனைத்திலும் அரசு நிறுவனங்கள், அரசு அமைப்புகளில் தான் முதலில் எரிபொருள் சிக்கன நடைமுறையை கொண்டு வந்தது. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு வாகன எண்ணிக்கை முதல் அரசு ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு வரையில் குறைத்தது. இதன் பின்பு தான் மக்களையும், தனியாரையும் சேமிப்புக்குள் இழுத்தது.
ஆனால் மோடி நேரடியாக சாமானிய மக்களின் வாழ்க்கையில் கைவைத்துள்ளார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
பிரதமரின் வேண்டுகோள் தங்கம் வாங்கும் பழக்கத்தை தற்காலிகமாக மாற்றலாம். ஆனால் அரசு எரிசக்தி இருப்பு, அந்நிய செலாவணி இருப்பு, முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் நாணய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தினால் மட்டுமே நீண்டகால பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நாட்டின் சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகளை வலுப்படுத்தினால் ரூபாய் மதிப்பு நிலையாக இருக்கும். இந்த அடிப்படைப் பணிகளை அரசு முன்னெடுத்தால் மக்களுக்கு சிக்கன வேண்டுகோள் தேவைப்படாது என்று அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா போன்றோர் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications