ஹெச்.ராஜா சொன்னது தான் இப்போ நடந்திருக்கு.. நேரு உள்விளையாட்டு அரங்கு பேனரில்.. 'ஜோசப் விஜய்'!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீண்ட நாட்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இந்த முக்கிய தருணம் நடக்க உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் இந்த பதவியேற்பு விழாவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

'ஜோசப் விஜய்' என்ற பெயர்
நடிகர் விஜய் தன்னை எப்போதும் விஜய் என்று மட்டுமே அழைத்து வந்தார். ஆனால் பாஜக தலைவர் ஹெச்.ராஜா விஜய்யின் ஆதார் கார்டு விபரங்களை வைத்துக்கொண்டு பல்வேறு பொதுக் கூட்டங்கள் மற்றும் பேச்சுகளில் அவரை 'ஜோசப் விஜய்' என்று தொடர்ந்து அழைக்கத் தொடங்கினார்.
இதன் மூலம் விஜய் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்பினார். இந்த விவகாரம் தொடர்ந்து பேசப்படுவதைத் தவிர்க்கும் வகையில் விஜய் தானே முன்வந்து 'ஜோசப் விஜய்' என்று அழைக்கத் தொடங்கினார்.
இதுதான் விஜய் தீவிர அரசியலில் இறங்குவதற்கான நேரமாக மாறியது, இதற்கிடையில் தான் விஜய் மோடியை சந்தித்த நிகழ்வும், ரஜினி அரசியலுக்கு வரும் விஷயங்களும் நடந்தது வந்தது.
ஹெச்.ராஜா விஜய் மீது மத சாயம் பூச நினைத்தாலும் அவரது ரசிகர்கள் மத்தியிலோ அல்லது மக்கள் மத்தியிலோ அல்லது அவரது புகழிலோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கான பேனர்களில் முதலமைச்சர் பெயர் 'ஜோசப் விஜய்' என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

108 தொகுதி வெற்றி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இந்த ஆதரவுகளுடன் தவெக பெரும்பான்மையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளே தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த நிலையில், தற்போது தவெக மூன்றாவது கட்சியாக ஆட்சி அமைக்க உள்ளது. இது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு எப்படிப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்தும், மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிறைவேற்றும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாளை நடைபெறும் பதவியேற்பு விழா இந்த புதிய அரசியல் அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும்.












Click it and Unblock the Notifications