Bussy N Anand: யார் இந்த புஸ்ஸி ஆனந்த் - 'இட்டுன்னு போய்'.. ஏளனம் செய்தவர்களை வெலவெலக்க வைக்கும் வரலாறு
சென்னை: புதுச்சேரியில் புஸ்ஸி என்ற சிறிய தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த என் ஆனந்த்.. விஜய் ரசிகர் மன்றங்களின் மாநில தலைவராக இருந்தார். இன்று அவர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் எம்எல்ஏ ஆகி, இன்று அமைச்சராகி உள்ளார். அவர் ஜெயித்த தியாகராய நகர் தொகுதி சென்னையில் இதயம் போன்றது.. அப்படியான தொகுதியில் அதிமுக, திமுகவை வீழ்த்தி எம்எல்ஏவான புஸ்ஸி ஆனந்த், இன்று முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் நகராட்சி துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்பட 9 அமைச்சர்களும் பதவி ஏற்றாரக்ள். அமைச்சராகி உள்ள புஸ்ஸி ஆனந்த்தின் வாழ்க்கை வரலாறை பார்ப்போம்.

புஸ்ஸி ஆனந்த்தின் அரசியல் பயணம் புதுச்சேரியில் தொடங்கியது. 2006-ம் ஆண்டு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் 'புஸ்ஸி' தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரை வீழ்த்தி முதன்முறையாக எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றார். அங்கிருந்துதான் அவருக்கு 'புஸ்ஸி ஆனந்த்' என்ற அடைமொழி கிடைத்தது. அதன் பிறகு பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் நம்பிக்கைக்குரிய தளபதியாக மாறினார்.
பிப்ரவரி 2, 2024 அன்று நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியைத் தொடங்கியபோது, அதன் முதல் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டார். கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, தொண்டர்களை ஒருங்கிணைப்பதிலும், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதிலும் இவரது பங்கு அளப்பரியது. "எங்கள் தலைவர் நிச்சயம் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார்" என்று தேர்தலுக்கு முன்பே புஸ்ஸி ஆனந்த் முழங்கினார். இதனை பலர் அன்று ஏளனமாக பார்த்தார்கள். ஏன் புஸ்ஸியையே ஏளனமாக பார்த்தார்கள். ஆனால் அன்று ஏளனமாக பார்த்தவர்கள் வாயடைத்துபோயிருக்கிறார்கள்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே மாறி மாறிச் சென்ற தியாகராய நகர் தொகுதியை, இந்த முறை தனது வசமாக்கி அதிர வைத்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். திமுக-வின் ராஜா அன்பழகனை எதிர்த்துப் போட்டியிட்ட புஸ்ஸி ஆனந்த், 51,632 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக, திமுக வேட்பாளர்களை வீழ்த்தி புஸ்ஸி வென்ற தி நகர் தொகுதி தான் சென்னையின் மிக முக்கியமான வணிக மையம் ஆகும். தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய வர்த்தக மையமும் தி நகர் தான்.
நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் பணபலம் மிக்க பாரம்பரிய கட்சிகளை ஓரங்கட்டி, "விசில்" சின்னத்தில் வெற்றி பெற்ற புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாட்டின் நகராட்சி துறை அமைச்சராகி உள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒலித்த இவரது குரல், இனி தமிழக சட்டமன்றத்தில் 'தியாகராய நகர்' தொகுதி மக்களின் குரலாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமாகவும் ஒலிக்க போகிறது.














Click it and Unblock the Notifications