கோடை மழைக்கு கொஞ்சம் ரெஸ்ட்... நாளை முதல் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்
சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: கோடை மழை ஆங்காங்கே பெய்து குளிர்வித்த நிலையில் நாளை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
அதேநேரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

கேரளா மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக இன்றைய தினம் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை,நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
20, 21ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை,மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்றும் புவியரசன் கூறியுள்ளார்.
கோடை மழை கொட்டித்தீர்த்த நிலையில் மழை கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளப்போகிறது. சுட்டெரிக்கப் போகும் வெயிலை சமாளிக்கத் தயாராகுங்கள் மக்களே. மே 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரத்தின் ஆட்டம் ஆரம்பமாகப்போகிறது.












Click it and Unblock the Notifications